முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
பாங்கி யவனாட்டணியியல் வினாதல்
போதேது கொய்வ ரிழையே தணிவர் பொழில்விளையாட்
டேதேது செய்வர் புனலேது தோய்வ ரெமைத்துதிப்பிற்
றீதேது மில்லை யெனும்வெங்கை வாணர் செழுஞ்சிலம்ப
சூதே தெனுமுலை யாருங்க ணாட்டியற் சொல்லுகவே,
(169)
கிழவோனவணாட் டணியியல் வினாதல்
என்னாட் டணியிய லென்னாயி னென்னுனக் கென்றனக்குப்
பொன்னாட் டணியிய லெல்லாங் கவர்ந்து புகழ்மலிந்த
சொன்னாட் டணியியல் வெங்கைபு ரேசர் சுடர்கிரிசூழ்
நின்னாட் டணியிய லெல்லா முரைத்தரு ணேரிழையே,
(170)
அவற்குத் தன்னாட்டணியியல் பாங்கிசாற்றல்
பிறைக்கோலஞ் செய்யு நுதுற்சூட் டணிகுவர் பெய்வளையால்
இறைக்கோலஞ் செய்வர் சினையா டுவரவ் விரதிதனைச்
சிறைக்கோலஞ் செய்யும் விழியார்தம் வெங்கைச் சிலம்பமதன்
நறைக்கோலஞ் செய்ய நறைக்கோலஞ் செய்வரென் னாட்டவரே.
(171)
இறைவிக் கிறையோன் குறையறிவுறுத்தல்
வன்மானு மென்முலைச் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய்
வின்மான் மதிக்கை யரவிந்தம் வாடவவ் வேள்விதரும்
நன்மான் கரத்தர்தம் வெங்கையி லேயிற்றை நாளிரவில்
நின்மான் மதிமுகங் காண்பான் விரும்பு நெடுந்தகையே,
(172)

169. இழை-அணிகலன். பொழில்-சோலை. தோய்தல்-மூழ்குதல். சூது-சூதாடு கருவி, 170. பொன்னாட்டு-தேவருலகத்தின். சொல் நாட்டு-சொல்லை நிலைநிறுத்தின. நேரிழை-அன்மொழித் தொகை. கவர்தல்-பற்றுதல்.171. நுதற் சூட்டு-நெற்றிச்சுட்டி. பெய்தல்-இடுதல். இறை-முன்கை. ஆடுதல்-குளித்தல். நறைக்கோல்-மணமுள்ள மலர்க்கணை. 172. வல்மானும்-சூதாடு கருவியை ஒக்கும். சேயரி-செவ்வரி. வில்-ஒளி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்