முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
இறைவிக் கிறைவன் வரவறிவுறித்தல்
மேனைக் குரிய மருமக னார்திரு வெங்கைவெற்பில்
மானைக் கடந்து செவியள வோடு மதர்விழியாய்
யானைக் கரியு மரிக்குச் சரபமு மாகியிந்தக்
கானைக் கடந்துவந் தாருயிர் போலுநங் காவலரே,
(177)
அவட்கொண்டு சேறல்
முருந்தா நகையுமை பங்காளர் வெங்கை முதுகிரிமேல்
இருந்தா மரைகண் மறுத்தவிப் போதி லிதழ்திறந்து
விருந்தா மளிகட் கினிதூட்டு மல்லிகை மென்மலர்கொய்
தருந்தா ரணிகுவ னில்லா தெழுந்தரு ளாரணங்கே,
(178)
குறியுய்த்தகறல்
காதா ரமுதம் பெறவேண்டி யன்றொரு காரிகைபாற்
றூதாய் நடந்த திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
போதார் மலர்மல் லிகையொடு முல்லையும் போய்க்கொணர்வேன்
பாதார விந்தம் வருந்தா திவணிற்க பைங்கொடியே.
(179)
வண்டுறைதாரோன் வந்தெதிர்ப்படுதல்
தாட்டா மரையென் றலைக்கணி வோன்வெங்கைத் தண்சிலம்பிற்
றீட்டா வொருநடை யோவியம் போலுந் திருவுருவீர்
ஆட்டா னெனுங்கதி ரேடாங் கதவடைத் தாங்கதன்மேற்
பூட்டா மளியுறப் பூட்டிற்றன் றோவுங்கள் பூவகமே.
(180)
பெருமகளாற்றின தருமைநினைந்திரங்கல்
விண்டெரி யாது முகிலான் முகில்பொழி வெள்ளத்தினால்
மண்டெரி யாதெவ் வகையடைந் தாயன்ப மாறன்வயற்
கண்டெரி யாவிரு ளிற்போ மருமை கருதியன்றோ
பண்டெரி யாயொளிர் வெங்கைப் பிரான்பதம் பாலித்ததே.
(181)

177. மேனை-மேருமலையின் மகள்; மலையரசன் மனைவி; இவளுக்கு மநோரமை என்றும் பெயருண்டு. கங்கையும் உமாதேவியும் இவளுடைய பெண்கள். மானைக்கடந்து-மானைவென்று. கான்-காடு. 178. முருந்து-மயிலிறகின் அடி. பங்காளர்-இடப்பாகத்திலுள்ளவர். 179. காதாரமுதம்-சுந்தரருடைய தேவாரப்பாடல்கள். காரிகை-பரவையார். ஆர்தல்-உண்டல். போது-பேரரும்பு. 180. தாட்டாமரை-தாளாகிய தாமரை; தாமரை மலர்போலுந் தாள். தீட்டல்-எழுதுதல். நடை ஓவியம்-நடத்தலைச் செய்யும் ஓவியம். 181. வெள்ளம்-நீர்ப் பெருக்கு. மாறன்-இளையான் குடிமாறநாயனார். பதம்-திருவடி. பாலித்தல்-தந்தருளல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்