முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
புரவலன் றேற்றல்
முன்காட்டு பந்தமும் வீடுமுள் ளோன்வெங்கை மொய்வரைசூழ்
கொன்காட்டி லுன்குழல் போலே யிருண்டவிக் கூரிருள்வாய்
பொன்காட்டு நல்லெழி லுன்னிடை போலப் புயனுடங்கு
மின்காட்டி வந்ததிங் குன்னூர் வழியை விழியினுக்கே.
(182)
புணர்தல்
ஓர்போ தெனும்பிறை வேணியிற் சூடு மொருவர்வெங்கை
தேர்போ லகன்ற மணியல்கு லாயிரு செய்யவிள
நீர்போ லமைந்தின்ப மேதிரண் டாங்குறு நின்முலைகள்
மார்போ டழுந்தத் தழுவவென் னான்செய்த மாதவமே.
(183)
புகழ்தல்
பெண்காட் டியவொரு பங்குடை யாருதிர் பிட்டினுக்கா
மண்காட் டியபொன் முடியார் திருவெங்கை வாணர்வெற்பிற்
றண்காட் டியமலர்க் கோதாய் குரும்பைக டாமொருமுக்
கண்காட்டு மாயினு மொவ்வ நினதொரு கண்முலையே.
(184)
இறைமகளிறைவனைக் குறிவரல்விலக்கல்
அரவெளி தோவவ் வனமெளி தோவன்றி யாற்றின்மடுக்
கரவெளி தோநந் திருவெங்கை வாணர் களமருட்டும்
இரவெளி தோவிவை யெல்லாங் கடந்திங் கெனையளிப்ப
வரவெளி தோவென் னுயிர்க்கர ணாகிய மன்னவனே.
(185)
அவனிறைவியை யில்வயின்விடுத்தல்
வலம்பொலி வீர மழுவாளன் வெங்கை மணிவரைமேல்
நலம்பொலி வாணுதல் வேற்கணல் லாயுன் னடைவிரும்பி
அலம்பொலி யோடு தொடரோ திமமிலை யஞ்சலைதாட்
சிலம்பொலி யாமற் பரிகரித் தேகுன் றிருமனைக்கே.
(186)

182. பந்தம்-பிறவிப் பிணிப்பு. வீடு-திருவடிப்பேறு. மொய்-வலி. கொன்-பெருமை. கூர்-மிகுதி. பொன்-திருமகள். நுடங்கல்-அசைதல்; துவளல். 183. ஓர்போதெனும் பிறை-ஒருகலையை உடைய திங்கள். வேணி-சடை. தேர்-தேர்த்தட்டு. 184. மண்காட்டிய-மண்சுமந்த. பொன்முடி-அழகிய திருமுடி. 185. அரவு-பாம்பு. வனம்-காடு. கரவு-முதலை. எனை அளிப்ப-என்னைக் காக்க. 186. வலம்-வெற்றி. ஓதிமம்-அன்னம். பரிகரித்து-அடக்கி. அலம்புதல்-ஒலித்தல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்