முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தோழிதலைமகடுயர்கிளந்துவிடுத்தல்
வம்பு குறித்து வருமா ரளியின மல்லிகைப்பூங்
கம்பு குறிக்கும் பொழுதில்வெங் கேசரைக் கைதொழுது
நம்பு குறிக்கண் வருமண்ண லேநின் னகரினிற்போய்க்
கொம்பு குறித்து வரக்காட் டொலியையெங் கொம்பினுக்கே.
(191)
திருமகட் புணர்ந்தவன் சேறல்
முப்போ தினுமந் தணர்தொழு தேத்துறு முத்தலைவேல்
அப்போ தகன்றிரு வெங்கையன் னாளல்குற் காடரவம்
ஒப்போ தெனவொண் மணிவிளக் கேற்றி யுதவிசெய்யுஞ்
செப்போ திளமுலை யாய்செல்லு வேனென் றிருநகர்க்கே.
(192)
இரவுக்குறியிடையீடு
இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல்
வள்ளலம் பாகு மரியாளன் வெங்கை மணிவரைமேல்
விள்ளலம் பானல் விழியாய் துணைபுணர் மென்சிறகர்
உள்ளலம் பாது துயில்கூர் தருத லொழிந்தெழுந்து
புள்ளலம் பாநின்ற தென்னோ நமதிளம் பூம்பொழிற்கே.
(193)
தான்குறி மருண்டமை தலைவி யவட்குணர்த்தல்
கானலை வேனின் முதிர்வா லெதிருறக் கண்டுமறி
மானலை நீரென வோடுதல் போல்வெங்கை வாணர்வெற்பிற்
றேனலை வார்தொடை யார்குறி யாமெனச் சென்றுநைந்தேன்
பானலை வென்றகண் ணாய்குறி வேறுறப் பைம்பொழிற்கே.
(194)

191. வம்பு-மணம்; போராட்டமுமாம். குறித்தல்-ஊதுதல். குறி-குறித்தவிடம். கொம்பு-ஊதுகொம்பு. 192. ஏத்துறும்-போற்றுகின்ற. போதகன்-ஞானாசிரியன். செப்பு-செப்புக் கிண்ணம்.193. அரி-திருமால். வள்ள லம்பாகு மரியாளன்-திருமாலை வலிய அம்பாக வுடையவன். மணி-அழகு. விள்ளல்-மலர்தல். பானல்-கருங்குவளை. 194. கானல்-கானல்நீர். இது பேய்களுக்குத் தேராதலால் இதனைப் பேய்த்தேர் என்பர். மறிமான்-மான் கன்று. பானல்-கருங்குவளை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்