| 9. திருவெங்கைக்கோவை |
|
| இறைவன்மேற்பாங்கி குறிபிழைப்பேற்றல் |
| |
| |
பொருவோ விலர்திரு வெங்கையி லேமுன் புனத்திலெமை உருவோ டுயிரமு தென்றுபொய் கூறி யுழன்றவரே வெருவோ மிரவும் பழியுமும் மூர்க்க வினவிவழி வருவோம் வரினு மெமைநோக்கு றீரென வந்திலமே.
|
(200) |
| |
| இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல் |
| |
| |
நறவே யிதழியுங் கங்கையும் பாம்பு நகைமதியும் உறவே யணியு மணிமுடி யார்வெங்கை யூரனைய புறவே யிளமயி லேயமு தேபசும் பொற்கொடியே மறவே னுனையென்று நீநினை யாமன் மறப்பினுமே.
|
(201) |
| |
| தலைவி குறிமருண்டமை பாங்கி தலைவற்குரைத்தல் |
| |
| |
ஈயா தவரைக்கண் டீவ ரெனச்செல் லிரவலர்போற் போயாவி யிற்சிறு மாங்கனி வீழப் புரவலனே நீயாவி யிற்செய் குறியென வேசென்று நித்தர்வெங்கை வீயா மலர்க்குழ லாள்வறி தேநொந்து மீண்டனளே.
|
(202) |
| |
| அவன்மொழிக்கொடுமை பாங்கியவட்கியம்பல் |
| |
| |
கள்ளெழுங் கொன்றையர் வெங்கையி லேமைக் கடலின்மதி நள்ளெழுங் காலம் பெறவே குறியிட நான்மருவி உள்ளெழுங் காம மருந்து பெறாம லுழன்றுசென்றேன் புள்ளெழுங் காலையென் றாரன்பர் தாமிளம் பூங்கொடியே.
|
(203) |
| |
|
| |
200. உயிர் அமுது-சீவ அமுதம். உழன்றவர்-திரிந்தவர். வெருவோம்-அஞ்சோம். 201.01. நகைமதி-ஒளியுள்ள இளம்பிறை. உற-பொருந்த. 202.02. வீயாமலர்க் குழலாள்-மலர் நீங்காத கூந்தலையுடையவள். ஈயாதவர்-உலோபர். இரவலர்-இரப்போர். நித்தர்-அழியாதவர். வீஆம் மலர் என்று பிரிப்பின் வண்டுகள் மொய்க்கும் மலர் என்க. 203.03. கள்-தேன். எழுதல்-பெருகுதல். மை-கருமை. நள்-நடு. மதி-மதுவையுடையது. மருவல்-பொருந்தல்.
|
|
|
|