முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைமகன் வருந்தொழிற் கருமைசாற்றல்
தாயுஞ் சுணங்கனு மூரும்வெங் காவலுஞ் சந்திரனாந்
தீயுங் குடிஞையுஞ் சேவலுந் தப்புஞ் செயலெளிதோ
பாயுஞ் சினவிடை யார்வெங்கை வாணர் பனிவரைமேற்
காயுங் கதிரிலை வேல்வீரர் நம்மைக் கருதினுமே.
(214)
தலைமகனூர்க்குச் செலவொருப்படுதல்
அறிவே யொருவடி வாமீசர் வெங்கையி லன்னமன்னாய்
எறிவே லிறைவர்தம் மூர்க்கேகி யாங்கவ ரெண்ணமெல்லாம்
அறிவே மவரன் பிலாமைகண் டாலுரை யாடலமாய்
மறிவே மறிந்தபி னந்தக னூர்க்கு வழிக்கொள்வமே.
(215)
பாங்கியிறைவனைப் பழித்தல்
வன்பற் றவர்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
நின்பற் றிலர்கை விடுத்தா ரிறையவர் நீயவர்மேல்
அன்பற் றிலையணங் கேசிறி தேனுமன் பற்றவரைப்
பின்பற் றுவருள ரோவிது தான்மிகப் பேதைமையே.
(216)
இறைவி யிறையோன்றன்னைநேர்ந் தியற்படமொழிதல்
சுரும்பு களிக்கும் பொழில்வெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்
அரும்பு கடுக்க முலையா யுலகுள வாவியெல்லாம்
விரும்பு கொடைத்தண் ணளிவேந்தர் நம்மை வெறுப்பவரோ
கரும்பு கசப்பது வாய்க்குறை யேயிந்தக் காசினிக்கே.
(217)

214.14. சுணங்கன்-நாய். குடிஞை-கூகை. பாயுஞ் சினவிடை-பகைவரைப் பாய்வதுஞ் சினப்பதுஞ் செய்யும் விடை. 215.15. இறைவர் அறிவே உருவாகப் பெற்றவராகையால் அறிவேயொரு வடிவாமீசர் என்னப் பெற்றார். மறிதல்-மீடல். அறிதல்-ஆராய்தல். 216.16. வன்பு-வன்மை. வலிய பற்று-மிக்க அன்பு. பின்பற்றுதல்-பின்தொடர்தல். 217.17. சுரும்பு-வண்டுகள். கடுத்தல்-நிகர்த்தல். தண்ணளி-அருள். காசினிக்கு-உருபுமயக்கம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்