முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
கனவுநலிபுரைத்தல்
ஓடுஞ் செயல்செயு மாசைத் தளையை யொடித்திருத்தல்
கூடும் படிசெயும் வெங்கைபு ரேசர் குவட்டில்விழி
மூடும் பொழுதெதிர் தோன்றிநிற் பார்கண் முகிழ்திறந்தால்
நீடும் புகழுடை யாரெதிர் தோன்றிலர் நேரிழையே.
(218)
கவினழிபுரைத்தல்
ஈயார் பொருளு மிறையாக் கிணறு மெனத்துணைவர்
தோயா முலைக ணலமிழந் தேன்மதி சூடுமொரு
மாயா மயமலர் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
வேயாம் பணைபுரை மென்றோட் கருங்கண் விளங்கிழையே.
(219)
தன்றுயர்தலைவற்குணர்த்தல் வேண்டல்
விழிக்கிட னாகு நுதலார்தம் வெங்கையில் வேந்தொடுபெண்
பழிக்கலை யென்றொரு வார்த்தையை யாரும் பகர்ந்துமிகுஞ்
சுழிக்கிட னாகுந் திருப்பாற் கடலெனத் தோன்றுபுகழ்
மொழிக்கிட னாகுது மென்பாரைக் கண்டில மொய்குழலே.
(220)
துன்புறுபாங்கி நீசொல்லெனச்சொல்லல்
பொறியா லயம்பொய்கை சூழ்வெங்கை வாணர்தம் பூங்கரத்தில்
மறியா மெனப்பிறழ் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய்
பிறியாதுன் னுள்ளத் திருப்பார்க் கயலவர் பேசுவதென்
அறியா தவர்தமக் கன்றோ வொருவ ரறிவிப்பதே.
(221)

218.18. ஓடுஞ் செயல்-மனத்தினை அலையச் செய்யுஞ் செயல். ஆசைத் துளை-அவாவாகிய விலங்கு. கூடும்படி-உண்டாகும்படி. குவடு-மலை. விழிமூடல்-கண்ணுறங்கல். 219.19. ஈயார்-உலோபர். துணைவர்-தலைவர். தோய்தல்-புணர்தல். நலம்-அழகு. மதி-திங்கள் துண்டம். மாயாமயமலர்-மாயையைக் கடந்தவர். 220.20. மொய்குழல்-அன்மொழித் தொகை. விழிக்கிடனாகு நுதலார் என்றது கண்ணுதலார் என்றபடி. வேந்து-ஆகுபெயர். 221.21. பொறி-திருமகள். ஆலயம்-இடம். திருமகள் இருப்பிடம் தாமரை மலராகையால் தாமரை மலருள்ள இடம் பொறியாலயப் பொய்கை யென்னப்பட்டது.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்