| 9. திருவெங்கைக்கோவை |
|
| உரவோனாடு மூருங்குலனு மரபும்புகழும் வாய்மையுங்கூறல் |
| |
| |
துதியுந் தொடையும் புனைபுயத் தாய்மணஞ் சூழ்ந்திலையேல் நதியும் பணியும் புனைவே ணியர்வெங்கை நாட்டினினின் பதியுங் குலனு மரபுநல் வாய்மையும் பல்புகழும் மதியுங் களங்கமும் போலொழி யாமன் மறுப்படுமே.
|
(244) |
| |
| ஆறுபார்த்துற்ற வச்சங்கூறல் |
| |
| |
அரியும் பணியுந் திருவெங்கை வாண ரடியரல்லார் திரியும் பலநெறி போன்றொழி யாதிரை தேர்ந்துகொடு வரியுங் கரியுஞ் செறியுஞ் சிறுவழி வாரலைநீ புரியுங் கருங்குழ லாள்பொருட் டாகப் புரவலனே.
|
(245) |
| |
| ஆற்றாத்தன்மை யாற்றக்கூறல் |
| |
| |
அழுவாண் மொழிதளர் வாளைய கோவென் றலமருவாள் விழுவாள் புரண்டெழு வாள்வெங்கை வாணரை வேண்டியடி தொழுவா ளநங்கன் கொடியனென் பாளுயிர் சோர்ந்திடுவாள் முழுவாள் விழிமட மாதெண்ண மன்ப முடித்தருளே.
|
(246) |
| |
| காவன்மிகவுரைத்தல் |
| |
| |
ஆக்குறுங் காரணர் வெங்கைபு ரேச ரணிவரையாய் தாக்குறுஞ் சீயமும் வேழமும் வேங்கையுந் தப்பிவந்து மாக்குறுஞ் சோலையெம் மூர்புகுந் தாலு மனையருகு காக்குறுங் காவலர் தம்மையெவ் வாறு கடப்பதுவே.
|
(247) |
| |
| காமமிகவுரைத்தல் |
| |
| |
தாள்வலி கொண்டு பகடுந்து காலன் றனைமருட்டும் ஆள்வலி கொண்டவர் வெங்கைவெற் பாநின் னணியலர்கற் றோள்வலி கொண்டு தவிர்ப்பினல் லாமற் றுயர்விளைக்கும் வேள்வலி கொள்ளுந் துணையெங்கள் பேதைக்கு வேறில்லையே.
|
(248) |
| |
|
| |
244. மணஞ்சூழ்தல்-வரைதல். ஒழியாமல்-எப்பொழுதும் நீங்காமல். மறு-குற்றம்; களங்கம். படுதல்-உண்டாதல். 245. அரியும் என்ற உம்மை உயர்வு சிறப்பு. அடியரல்லார்-தீவினையாளர்கள். செறிதல்-நெருங்குதல். புரிதல்-விரும்புதல். 246. மொழிதளர்தல்-சொற்குழறுதல். அலம்வரல்-சுழலல். அநங்கன்-காமன். முழுவான்-பெரிய வான். 247. ஆக்குறும்-எல்லாவற்றையும் படைக்கின்ற. தாக்குறும்-ஒன்றோடொன்று முட்டிப் பொரும். சீயம்-சிங்கம். வேழம்-யானை. 248. பகடு-எருமைக் கடா. மருட்டல்-வெல்லல். ஆள்வலி-ஆளும் வலி. கொள்ளல்-கவர்தல். பகடுந்துகாலன் றன்னைத் தாள்வலி கொண்டு மருட்டும் எனக் கூட்டுக.
|
|
|
|