முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி
பூளை யணியுஞ் சடையாளர் வெங்கை புரேசர்வெற்பிற்
பாளை மணங்கமழ் மாதிருப் பாளெனப் பச்சைமயிற்
காளை யனையநங் காதலர் தாமலர்க் கால்வருந்த
நாளை வராம லிடம்போய் மறியுநன் னாரைகளே.
(257)
தலைவியைப்பாங்கி யாற்றுவித்தல்
பொலம்புரி வார்சடை யார்வெங்கை வாணர் பொருப்பணங்கே
கலம்புரி மேனியிற் குங்குமந் தோய்தண் களபமென்ன
நலம்புரி காதலர் தம்பதி நோக்கி நடந்தவழி
வலம்புரி தோன்று மடிப்பொடி பூசுக வந்தருளே.
(258)
தலைவன்வந்தமை பாங்கியுணர்த்தல்
மலையானை மாதுல னென்பார்தம் வெங்கை வரையிடைப்பூஞ்
சிலையானை வென்ற வெழிலுடை யார்நஞ் செழும்பதிக்குக்
கொலையானை மேற்பசும் பொன்னோடு வந்தனர் கோதைகமழ்
முலையானை மேற்பசும் பொன்னொழி வாய்மலர் மொய்குழலே.
(259)
பாங்கிதலைவனொடு நொந்துவினாதல்
காரார் மணிமிடற் றெம்மான் றிருவெங்கைக் காரிகைதன்
பீரார் நுதலு முடியாக் குழலும் பெருவிழியில்
நீரார் நிறைகுட முங்கண்ணு றாமைநன் னீதியென்றோ
வாரா தொழிந்தனை நின்கருத் தேதுசொன் மன்னவனே.
(260)

257. பூளை-பூளைப்பூ; ஆகுபெயர். பச்சை மயில் என்ற சிறப்பால் காளை முருகனை உணர்த்திற்று 258. பொலம்-பொன். பொலம் புரி வார்சடையென்றதனாற் பொன்னின் மிக்குப் பொலிவதிறைவர் சடையென்றவாறாயிற்று. கலம்-பூண். 259. மலையான்-மலையரையன். பூஞ்சிலையான்-மலர்வில்லையுடையவன். 260. மணி நவமணிக்கும் பொதுவாயினும் காரார் என்ற அடையால் நீலமணிஎனக் கொள்க. காரிகை-ஆகுபெயர். பீர்-பசலைநிறம். நுதல்-நெற்றி பெருவிழியினீரார் நிறைகுடம்-கொங்கை. கண்ணுறாமை-நோக்காமை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்