முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைவன்பாங்கியொடுநொந்துவினாதல்
அலையா நிலையர் திருவெங்கை வாண ரணிவரையீர்
கலையா னிறைமதி வேய்ங்குழல் சோலைக் கருங்குயில்யாழ்
மலையா னிலநல்ல வோவல்ல வோவம் மதனனெடுஞ்
சிலையா னுமிழ்வ தலரோவம் போவென்ன செப்புமினே.
(261)
தலைவியையாற்றுவித்திருந்த வருமைசாற்றல்
நீர்மல்கு கண்ணும் வளைதீர்ந்த கையும்வெந் நெட்டுயிர்ப்பும்
பீர்மல்கு கொங்கையு மாய்ப்பின்னை வேறு பிழைப்பிலதாய்
ஆர்மல்கு செஞ்சடை யார்வெங்கை வாண ரருளதனால்
தார்மல்கு தோளண்ண லேபுரந் தேனின் றனியுயிரே.
(262)
வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல்
என்பொருட்பிரிவுணர்த் தேந்திழைக்கென்றல்
இடைநிலை யாம்பொரு ளுண்டேன் முதனிலை யெய்தறமுங்
கடைநிலை யாமின் பமுமேவு மென்றனர் காதலரென்
றடைநிலை யாம்பதத் தெம்மான் றிருவெங்கை யாயிழைக்குத்
தொடைநிலை வார்குழற் பூங்கொடி யேசென்று சொல்லுகவே.
(263)
நின்பொருட்பிரிவுரைநீயவட்கென்றல்
என்னோடு சொல்லுக செல்லாமை யுண்டெனி னீரமதி
தன்னோடு மல்கு சடையாளர் வெங்கைத் தடஞ்சிலம்பிற்
பொன்னோடு சொல்லுக நீநின் செலவைப் பொருணினைந்து
முன்னோடு பின்னு மிழப்பான் கருதிய முன்னவனே.
(264)

261. அலையாநிலையர்-சலிக்காத நிலையை உடையவர். கலையால் நிறைமதி-முழுத்திங்கள். வேய்ங்குழல்-மூங்கிற்குழல். இதனைப் புள்ளாங்குழல் என்பர். பொள்ளாங்குழல் என்பது திரிந்தது. பொள்ளல்-தொளைத்தல். 262. வளை-வளையல். மல்கல்-நிறைதல். தீர்தல்-ஒழிதல். பிழைப்பு-உய்வு. புரத்தல்-காத்தல். 263. “வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள், நடுவண தெய்த விருதலையு மெய்தும்” என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. பூங்கொடி-உவமையாகு பெயர். 264. “செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின், வல்வரவு வாழ்வார்க் குரை” என்பது திருக்குறள். முன்-அறம். பின்-இன்பம். பொன்-ஆகுபெயர். முன்னவன்-தலைவன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்