முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
நீடேனென்றவ னீங்கல்
மாணிக்க வாசகன் செந்தமிழ் மாலை மணக்குமுடி
வேணிக் கடவு ளிடமா கியதிரு வெங்கையன்னாய்
ஆணிக் கனக மனையாள் செயலிங் கறிந்துசெல்வேன்
பாணிக் குமாறிருந் தாலெனைப் போலிலைப் பாவிகளே.
(265)
பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்
இருளா லயமன்ன வார்குழ லாய்நம் மிறைவரின்று
வெருளா லமுண்ட திருவெங்கை வாணர்தம் மெல்லடியை
அருளா லலதெய்த லாகாத வாறென வானைமிசைப்
பொருளா லலதுனை யெய்தவொ ணாதென்று போயினரே.
(266)
தலைவியிரங்கல்
பொழியு மருளுடை யார்வெங்கை வாணர் பொருப்பருவி
விழியு மெலிவும் பசப்பூர் முலையுமவ் வின்மதனால்
அழியு மனமு நினைந்தில ராயினு மாவொருபெண்
பழியு நினைந்தில ரேபொருண் மேற்சென்ற பாதகரே.
(267)
தலைவியைப்பாங்கி கொடுஞ்சொற்சொல்லல்
அரியா ரறிதற் கரியார் திருவெங்கை யாயிழையாய்
பிரியார் பிரியப்பட் டாரிலை யோநின் பெருமணக்குக்
கரியார் பொருடரச் சென்றார் பொருட்டுக் கயன்மருட்டும்
வரியார்கண் ணீர்மல்க வென்னைகொ லோநின்று மாழ்குவதே.
(268)

265. மாணிக்க வாசகன் செந்தமிழ் மாலை-திருவாசகம். முடிவேணி-திருமுடிச்சடை. ஆணிக் கனகம்-உரையாணிக் கிளைக்காத பொன். பாணித்தல்-காலந் தாழ்த்தல். 266. இருள் ஆலயம் அன்னவார்குழலாய்-இருளுக்கிருப்பிடம் போன்ற நீண்ட கூந்தலையுடையவளே. ஆலம்-நஞ்சு. ஆனைமிசைப் பொருள்-யானைச்சுமையாக்கிக் கொணரும் பொருள். 267. இழிதல்-இறங்குதல். பாதகர்-தீவினையை உடையவர். பொருண்மேல்-பொருளீட்டத்தின்மேல். 268. ஆயிழை-அன்மொழித் தொகை. மணத்துக்கு எனற்பாலது அத்துச்சாரியைகுறைந்து மணக்கு என நின்றது. மாழ்கல்-மயங்கல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்