முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
அவர்தூதாகிவந் தடைந்ததிப் பொழுதெனத் துணைவிசாற்றல்
இணர்வார் சடைமுடி யார்வெங்கை வாண ரிமயவெற்பிற்
புணர்வார் முலையிள மென்கொடி யேநம் புலம்புறுநோய்
உணர்வார் பொருளொடும் வந்தாரென் றோகை யுரைத்துமுகில்
வணர்வார் குழலெழில் வாங்குதல் வேண்டிமுன் வந்ததுவே.
(274)
தலைமகளாற்றல்
பொருநாண் மதனை யழித்தே யிமயப் பொருப்பின்மணத்
திருநா ளதிற்றரும் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பிற்
கருநாண் மலர்விழி மாதேயென் றாயினுங் காதலரீங்
கொருநாள் வருவரென் றேநின்ற தாவி யுடலகத்தே.
(275)
அவனவட்புலம்பல்
ஓடுந் தடங்கண் மணற்கேணி யாகவவ் வூற்றிறைக்கும்
நீடும் புளின முலையாக் குறைவு நிறைவுமின்றிச்
சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
பாடுஞ் சுரும்பலர் மொய்குழ றேம்பிப் பதைத்திடுமே.
(276)
பாகனொடுசொல்லல்
வார்கொண்ட மென்முலை யாளிடை யேபோய் வருவலென்னுங்
கார்கொண்ட வென்னிடை யில்லைபொய் யென்னக் கடுக்கைநறுந்
தார்கொண்ட செஞ்சடை யார்வெங்கை வாணர் தடஞ்சிலம்பிற்
றேர்கொண்ட சீர்வல வாவிரைந் தேகச் செலுத்துகவே.
(277)
மேகத்தொடு சொல்லல்
சென்னிப் பிறையர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
மன்னிப் படருங் கொடிபோற் றழைத்து மலர்வதன்றெங்
கன்னிப் பசுங்கொடி வாடுங்கண் டீர்மெய் கருகிநின்று
மின்னிப் பொழியி லெனையன்று போய்க்கரு மேகங்களே.
(278)

274. இணர்-பூங்கொத்து. வார்-நீண்ட. புணர்-நெருங்கின. ஓகை-உவகை. புலம்பு-துன்பம். வாங்குதல்-பெறுதல். 275. பொருதல்-போர் செய்தல். அழித்தல்-நீறுபடுத்தல். தருதல்-படைத்தல். உடலகத்து-உடம்பினுள்ளே. 276. ஓடுதல்-காதளவோடுதல். தடங்கண்-விசாலமாகிய கண். புளினம்-மணற்றிடர். தேம்புதல்-வாடல். பதைத்தல்-துடித்தல். 277. வார்கொண்ட மென்முலையாள் என்றது தலைவியை. இடை-மருங்குல். கடுக்கை-ஆகுபெயர். செலுத்துக-வியங்கோள். 278. மன்னி-நிலைபெற்று. மெய்கருகி நின்று-உடல்கறுத்துநின்ற.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்