முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
எறிவளைவேற்றுமைக் கேதுவினாதல்
கனம்வேறு பட்ட மிடற்றார்தம் வெங்கைக் கனகவெற்பில்
புனம்வேறு பட்டிங்கு வந்தவன் றேநம் புரிகுழற்குத்
தனம்வேறு பட்டு விழிவேறு பட்டுத் தளர்ந்துமொழி
மனம்வேறு பட்டதென் னோவுரை யாய்செவ் வரிக்கண்ணியே.
(299)
பாங்கி வெறிவிலக்கல்
வீட்டை யுவந்து தருவார் திருவெங்கை வெற்படுத்த
காட்டை விரும்பி யுறைதெய்வ மேயெங்கள் கன்னிபடும்
பாட்டை நினைந்திலை வாளா வுலகிற் பலர்விரும்பும்
ஆட்டை விரும்பினை நன்றோ விதுசொல் லறிவினுக்கே.
(300)
வெறிவிலக்கியவழி செவிலிவினாதல்
மின்னோ டுவமிக்குஞ் செஞ்சடை யார்திரு வெங்கைவெற்பிற்
பொன்னோய் விலக்குவ மென்றெண்ணி யாங்கள் புகும்பொழுதில்
என்னோ வெறிவிலக் குற்றா யிளமுலை யேந்திழையாள்
தன்னோ யறிந்தனை யேலுரை யாய்மைத் தடங்கண்ணியே.
(301)
பூத்தருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல்
தடுக்க நிறைபுனற் பண்ணையிற் சூன்முதிர் சங்கம்வந்து
படுக்க நளின மலர்வெங்கை வாணர் பனிவரைமேல்
உடுக்க வுதவினன் மாந்தழை மாமல ரொண்ணுதற்குக்
கொடுக்க மதனை விடுத்தகன் றானொரு கோமகனே.
(302)
புனறருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல்
வான்கற்ற வண்புகழ் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்
றான்கற்ற கல்வி தளர்வூ டுதவுந் தகையெனவே
தேன்கற்ற மென்மொழி யாள்வரு நீரொடு செல்பொழுதில்
ஊன்கற்ற வேலுர வோனொரு வேந்த னுதவினனே.
(303)
களிறுதருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல்
ஐங்கைக் களிறு தரும்வெங்கை வாண ரணிவரைமேல்
வெங்கைக் களிறு தனைப்பாய் வுறவர மெய்ந்நடுங்கிக்
கொங்கைக் களிறு புறம்பாய் வுறப்புல்லிக் கொண்டனள்வேற்
செங்கைக் குமரனை யன்னா னொருவனைத் தேமொழியே.
(304)

299. கனம்-முகில். வேறுபடல்-பகைத்தல். புரிகுழல்-அன்மொழித் தொகை. தனம்பேறு படல்-பசத்தல். செவ்வரிக்கண்ணி என்றது பாங்கியை. 300. வீடு-வீடுபேறு. காட்டை விரும்பியுறை தெய்வம்-வனதேவதை. பாடு-துன்பம். 301.01. பொன்னோய்-பொன்போன்றவளாகிய தலைவியினுடைய துன்பத்தை. வெறி-வெறியாடல். 302.02. பண்ணை-வயல். உதவல்-கொடுத்தல். ஒண்ணுதல்-அன்மொழித் தொகை. 303.03. வான்-ஆகு பெயர். உதவல்-கைகொடுத்தல். வருநீர்-புதுவெள்ளம். 304.04. தேமொழி என்றது செவிலியை. தலைவியை எனக்கொள்ளுதலும் அமையும். புல்லல்-தழுவல். தேமொழி-அன்மொழித் தொகை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்