முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
உடன்போக்கு
பாங்கி தலைவற்குடன்போக்குணர்த்தல்
தாயிற் சிறந்த திருவெங்கை வாணர் தடஞ்சிலம்ப
போயிப் பொழுது வருவலென் றேகிற் பொறுக்கறியாள்
தீயிற் புழுவென வேபதைப் பாணின் றிருவருளால்
நீயித் திருவை யுடன்கொடு போநின் நெடுநகர்க்கே.
(309)
தலைவ னுடன்போக்குமறுத்தல்
அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிமலர்க்குச்
சனித்த நெருஞ்சிப் பழமென் றறிந்துந் தகுவரன்றி
மனித்தர் வழங்கரும் வெங்கொடும் பாலை வழியொருநான்
இனித்த மொழியுடை யாரையெவ் வாறுகொண் டேகுவனே.
(310)
பாங்கி போக்குடன்படுத்தல்
துணையிற் புணர்களி வண்டிளம் பூந்தண் டுணர்பொதுளும்
பணையிற் றுயில்பொழில் வெங்கைபு ரேசர் பனிவரையாய்
பிணையிற் பிறழ்கருங் கண்ணாட்கு நின்னைப் பிரிந்தமலர்
அணையிற் கொடியது வோவைய நீசெல் லழற்சுரமே.
(311)
தலைவன் போக்குடன்படுதல்
நாமொழி யாது புகழ்வா னருள்வெங்கை நாதரைச்சொற்
பாமொழி யானெய்த லாம்பாலை ஞானசம் பந்தனுக்குத்
தேமொழி யாயுன் னுயிரனை யாட்கருஞ் செம்பவள
வாய்மொழி யாளிளங் காவாகும் பட்ட மரங்களுமே.
(312)

309.09. சிலம்பன்-மலைநாடன். பதைத்தல்-துடித்தல். திருதிருவைப் போல்வாள்; உவமையாகு பெயர். 310.10. “அனிச்சமு மன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்பது திருக்குறள். அனிச்சம்-அனிச்சமலர். அன்னத்தூவி-அன்னத்தின் மெல்லிய சிறகு. ஈற்றேகாரம்-இரங்கல். இனித்த மொழி-இன்சொல். 311.11. பொதுளும்-நிறைந்த. பனிவரை-குளிர்ந்த மலை. பிணை-பெண்மான். பிறழ் பிறழ்கின்ற. 312.12. புகழ்வான்-புகழ. பாமொழி-தேவாரத்திருப்பதிகம். பாலைநெய்தலாகப் பாடியது. திருநனி பள்ளியில்; தேமொழியாய் என்றது பாங்கியை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்