முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
கண்டோர் தம்பதி யணிமைசாற்றல்
பணியே றியசெஞ் சடைவெங்கை வாணர் பனிவரைமேல்
கணியேறு மாவிற் படர்கொடி மீது கழனிவளை
அணியேறு வேழம்பர் போலே தவழு மணிநகரம்
மணியேறு தோளண்ண லேயுங்கண் மாட வளநகரே.
(326)
தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தல்
பன்னகர் கின்னர மன்னவ ரென்றும் பரவுவெங்கை
நன்னகர் தன்னக ரென்னுமெம் மான்கிரி நன்னுதலாய்
பொன்னக ரென்னக ரிந்நகர் முன்னெனப் போற்றலுறும்
இந்நக ரென்னகர் நின்னக ராக வெழுந்தருளே.
(327)
செவிலிபாங்கி யைவினாதல்
சொன்மாது தன்புகழ் யாழிலிட் டேத்தித் தொழுமிமய
நன்மாது பங்கர் திருவெங்கை வாணர்நன் னாடனையாய்
என்மாது சென்ற விடமே தறிந்தில னின்முழுதும்
பொன்மாது சென்ற மனைபோற் பொலிவறப் புல்லென்றதே.
(328)
பாங்கி செவிலிக்குணர்த்தல்
சாந்தந் தருபவர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
சேந்தங் கயல்விழி நீர்மல்க வேநின்று தேம்புமன்னே
காந்தந் தொடர்கரும் பொன்போல வின்றுதன் காந்தனைக்கண்
டேந்தங் கலமுலைச் செம்பொனன் னாடொடர்ந் தேகினளே.
(329)
செவிலி யினையலென்போர்க் கெதிரழிந்துமொழிதல்
அனையே யனைய வருளாளர் வெங்கை யணிவரைமேல்
இனையே லெனவெனக் கோதிநிற் பீரெனைப் போலவொரு
புனையே டவிழ்மலர்க் கோதையைப் பாலையிற் போக்கிநின்றால்
வினையே னுறுதுய ரெல்லா முமக்க வெளிப்படுமே.
(330)

326.26. பணி-பணத்தையுடையது பாம்பு. பணம்-பாம்பின்படம். கணி-வேங்கைமரம். வேழம்பர்-கழைக்கூத்தர். 327.27. பன்னகர்-பாம்பு வடிவமுடைய ஒரு தேவசாதியார். பரவு-வழிபடுகின்ற. 328.28. சொல்மாது-கலைமகள். பொன்மாது-திருமகள். பொலிவு-விளக்கம். புல்லெனல்-ஒளிமழுங்கல். 329.29. சாந்தம்-மௌனநிலை. சேந்து என்பதற்குப் பகுதி செம்மை. மல்கல்-தளும்பல். தேம்புதல்-அழுதல். கரும்பொன்-இரும்பு. காந்தன்-கணவன். செம்பொன்-திருமகள். 330.30. இனைதல்-வருந்துதல். புனையேடவிழ் மலர்க் கோதை-பெண். பாலை-கடுஞ்சுரம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்