முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
செவிலி தன்னறிவின்மை தன்னைநொந்துரைத்தல்
புன்றோ லுடையர் திருவெங்கை வாணர் பொருப்பணங்கு
வன்றோ ளிராம னொடுசீதை தங்கண் மனைகடந்து
சென்றோர் வனம்புகுந் தாளென்பர் மாசி றெரிவையர்க்கு
நன்றோ வதுபிழை தானோவென் றாளது நாடிலனே.
(331)
செவிலி தெய்வம்வாழ்த்தல்
செடிமுழு தும்புலி துஞ்சுபொல் லாதவெந் தீச்சுரத்தில்
அடிமுழு துஞ்செம் புனல்பாயச் சென்ற வணங்குவந்தால்
படிமுழு தும்புகழ் வெங்கைபு ரேசர்தம் பாலனுக்கெங்
குடிமுழு துந்தொழும் பாளாக வோலை கொடுக்குதுமே.
(332)
செவிலி நற்றாய்க்கறத்தொடுநிற்றல்
வேலைத் தரளமு மைந்தலை நாக வியன்மணியுஞ்
சோலைச் செழுமல ரும்போல நம்மைத் துறந்துமெல்ல
மாலைக் குழலி தனக்குரி யானை மணந்துசென்றாள்
பாலைப் பொருமொழி பங்கர்வெங் கேசர் பனிவரைக்கே.
(333)
நற்றா யயலார்தம்மொடு புலம்பல்
பொன்போ லொருபெண் டிருவெங்கை யானருள் பூண்டுபெற்றோர்
என்போ லிலையுல கம்பதி னான்கினு மிப்பொழுது
துன்போ டழுங்கு மவருமென் போலிலைச் சோகமுறேல்
என்போ ரறிகுவ ரோவறி யாரிவ் விரண்டையுமே.
(334)
நற்றாய் தலைமகள் பயிலிடந் தம்மொடுபுலம்பல்
ஆவிக் குரியர் திருவெங்கை வாண ரணிவரைமேல்
மேவிக் குடையுஞ் சுனையே மலர்கொய்யு மென்பொழிலே
வாவிக் குமுத மலர்வாய் சிறிது மலர்ந்துபெற்ற
பாவிக் குரையுமென் றென்சொல்லிப் போயினள் பாதகியே.
(335)

331.31. புன்தோல்-இழிந்த தோல். நாடல்-ஆராய்தல். 332.32. படிமுழுதும்-உலகம் முழுவதும். செடி-சிறுதூறு. துஞ்சல்-உறங்கல். செம்புனல்-உதிரம். தொழும்பு-அடிமை. 333.33. வேலை-கடல். தரளம்-முத்து. வியல், வியன் இரண்டற்கும் பொருள் வேறுபாடின்று. மணத்தல்-கூடல். பாலைப்பொருமொழி-பாலை நிகர்த்த மொழியினையுடையாள். 334.34. அழுங்கல்-வருந்தல். சோகம்-துக்கம். இவ்விரண்டையும் என்றது இவளைப் பெற்ற பொழுதின் மகிழ்ச்சியும் இழந்தபொழுதில் துக்கமும் எனக் கொள்க. 335.35. ஆவி-உயிர்கள். குடைதல்-மூழ்குதல். பொழில்-சோலை. வாவி-தடாகம். குமுதம்-செவ்வல்லி மலர். பாதகி யென்றது தலைவியை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்