முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
இந்தியங் கரண முடலமவே றாக்கி
      யிருண்மலப் படலமுங் கீறிக்
கந்தமு மலரு மெனநினை யென்னிற்
      காண்பறக் காணுநா ளுளதோ
வந்தொரு களிறு முழுவையுங் கொன்ற
      மலிபகை தவிர்ப்பவெண் ணிகந்த
தந்தியும் புலியும் வளர்த்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(17)
முழங்குவண் டினங்கள் விருந்துணு மலங்கன்
      மொய்குழன் மகளிர்தம் மயலாற்
புழுங்குமென் றனைநின் றிருவடி நிழலிற்
      புகவிடுத் தளிக்குநா ளுளதோ
வழங்குவெண் டிரையா றவிர்சடை கரப்ப
      மணிமுடி நின்றிழிந் திடல்போல்
தழங்குவெள் ளருவி யிழிந்தொளிர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(18)
குன்றுதோ றாடுங் குமரனே யெனவுங்
      கொடுஞ்சிலை மதனவே ளெனவும்
புன்றொழின் மனிதர்ப் புகழ்ந்துபாழ்க் கிறைக்கும்
      புலமைதீர்த் தெனக்கருள் புரியாய்
ஒன்றொரு தினந்தோட் குட்குழைந் தனமென்
      றுறாதுநா டொறுமக மேரு
தன்றலை தாழ்ப்ப வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(19)

17. கந்தம் சிவத்திற்கும், மலர் ஆன்மாவிற்கும் ஒப்பு. வந்த என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. உழுவை-புலி. தந்தி-யானை. காண்பற-இடைவிடாது. 18. சடை மறையாநிற்க அச்சடைக் கங்கைதான் மறையாது இழிதல்போல அருவியழியும் என்பது.அலங்கல்-மாலை. புழுங்கும்-வருந்தும். கரப்ப-மறைக்க. தழங்கு. ஒலிக்கின்ற. 19. ஒன்று-ஒரு தினம்; முப்புரஞ் சுட்ட நாள்- தோள்-புயம், கை. குழைதல்-வில்லாக வளைதல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்