முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
வெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு
      விருந்துசெய் துறும்பெரு மிடியுங்
கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுமிக்
      கொடியனேற் கருளுநா ளுளதோ
வண்டுழுங் குவளை மலர்தடஞ் சுனையின்
      மற்றைவா னவர்க்குரித் தன்றிச்
சண்டியுண் மகிழ்ந்து கொளமலர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(20)
வந்துமா மறலி யெனதுயி ருண்பான்
      மயிலையுண் சிரலினிற் கின்றான்
முந்திநீ யெனையா னந்தவா ரிதியின்
      மூழ்குற விடுத்தருள் புரியாய்
நந்துளான் மலையே யென்றுசா திப்ப
      நனைமலர் வேங்கையு மசோகுஞ்
சந்துமேன் முளைப்பச் செய்துகொள் சோண
      சைலனே கைலைநா யகனே.
(21)
பூமழை யமரர் பொழியமா தவர்கட்
      புனன்மறு கிடைப்பொடி யடக்கத்
தூமொழி மனைநீ தூதுபோம் பயனில்
      சொற்பதர் புடைத்திளைக் கின்றேன்
யாமுணர் மிகுபே ருருவமாய் வரினு
      மிருவரு முணர்த்திடி னன்றித்
தாமுணர் கிலரென் றெழுந்துயர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(22)
கழைமொழிக் கொடியோர்க் கேவல்செய் துடலங்
      கமருகு மமிழ்தின்மங் குறாமல்
விழைவறத் துறந்துன் றிருவடிக் கமலம்
      விழைகுநர்க் கேவல்செய் திலனே
மழைமதக் களிநல் யானைமத் தகம்பாய்
      வள்ளுகி ரோடுசெல் லரிமாத்
தழைசிறைச் சிம்புள் கொண்டெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(23)

20. புனையும். அணியும். மிடி-வறுமை. சிவவடிவாகிய இம் மலையிற் பூத்த பூ சூடிக்கழிவடைந்த தாதலின் சண்டேசருக்கே உரித்தாதல் குறித்தவாறு- 21. மறலி-இயமன். மயிலை-மீன். சிரல்-மீன்குத்திப் பறவை. சந்தும்-சந்தனமும். நனை-தேன். நந்துளான்-கையிற் சங்கினையுடைய திருமால். நந்துமாமலையே என்று பாடங்கொண்டு மரஞ்செடி கொடிகள் வளருகின்ற பிற மலைகளைப் போன்றதே இம்மலையும் என்று அறிவிலார் கூற என்று பொருள் கோடலுமாம். 22. கட்புனல்-இன்பக்கண்ணீர். தூதுபோம் பயன்-தூது போதற் கேதுவாகிய பொருட் சிறப்பு. யாம்வரினும் யாமுணர்த்திடினன்றி இருவரும் தாமுணர்ந்திலர் என இயையும். மறுகு-வீதி. பொடி-புழுதி. 23. கழை-கரும்பு. கமர்-நிலத்தின் வெடிப்பு. உகும்-சிந்தும். விழைகுநர்-விரும்புவோர். மாவென்புழி இரண்டனுருபு விரிக்க. சிம்புள்-சரபம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்