முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
அச்சத்தன்மைக் கச்சமுற்றிரங்கல்
ஆல மெழும்பொழு தவ்வெங்கை வாணர்க் கபயமென
ஓல மிடுஞ்சுரர் போலே யபயமென் றோடுங்கொலோ
ஞால மிடந்து திரிந்தவக் கோலமு நாணவொரு
கோல மெழும்பொழு தஞ்சிமுன் போந்த கொழுநனுக்கே.
(340)
கண்டோரிரக்கம்
துன்படு மையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்
மின்படு நுண்ணிடை யாள்விளை யாடிய மென்பொழிலும்
பொன்படு மூசலும் வண்டலம் பாவையும் பூவையுங்கண்
டென்படு மோவறி யேம்பெற்ற தாயென் றிருப்பவளே.
(341)
செவிலியாற்றாத்தாயைத் தேற்றல்
வெல்லப் படாத வயில்விழி யாள்செயல் வேறொன்றன்றிச்
சொல்லப் படாத செயலாய் முடியிற் றுயர்தனன்றோ
அல்லற் படாதியன் னேவெங்கை வாண ரருள்கொடுநான்
செல்லப் படாத விடமேனுஞ் சென்று திருப்புவனே.
(342)
ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல்
தன்னைத் தலைவனை நின்றாங் கறிந்து தவம்புணர்ந்து
முன்னைப் பவந்தொலைத் தீருண்மை கூறுமின் மூரிவெள்ளம்
மின்னைப் பொருசெஞ் சடையில்வைத் தார்வெங்கை வெற்பிலெங்கள்
பொன்னைக் கரந்தொரு காளைகொண் டேதனி போயினனே.
(343)

340. ஆலம்-பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சு. ஓலமிடல்-முறையிடல். சுரர்-தேவர். ஞாலம்-பூமி. இடத்தில்-பிளத்தல். கோலம்-பன்றி. கொழுநன்-கணவன். 341. துன்பு-துன்பம், (பிறவித்துன்பம்) மின்படும் என்பதில் படும் உவமஉருபு. பூவை-நாகணவாய்ப்புள். 342. அயில்-வேல் வெல்லப்படாத அயில் விழியாள் என்றது தலைவியை. துயர்தல்-துக்கித்தல். அல்லற்படல்-துன்பப்படல். திருப்புதல்-மீட்டல். 343.3, மூரிவெள்ளம்-பெருவெள்ளம். பொருதல்-நிகர்த்தல். பொன்-திருமகள். முக்கோற் பகவர்-மூன்று கோல்களையுடைய துறவிகள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்