முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தீங்குங்கிழத்தி பாங்கியர்தமக்குத் தன் செலவுணர்த்தல்
வெறிமேவு கொன்றையம் பூந்தொடை யார்திரு வெங்கைவெற்பில்
கறிமேவு முப்பென வன்பரிற் கூடிவெங் கானகத்தில்
நெறிமேவு மங்கை மகிழ்ந்துசென் றாளென நீருரைமின்
மறிமேவு முண்கண் மடக்கொடி மாதர்க்கு மாதவரே.
(362)
தலைமகடன் செலவீன்றாட்குணர்த்தல்
மின்னைத் திருத்து மவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில்
பொன்னைப் பரித்த திருமார்ப ரோடதர் போயினளென்
றென்னைக் கொடுத்துக் கலங்கவிழ் நாய்க னெனக்கவலும்
அன்னைக் குரைத்தரு ளீர்வழு வாநெறி யந்தணரே.
(363)
நற்றாய்க்கந்தணர் மொழிதல்
அல்லஞ்சு கண்டர் திருவெங்கை வாண ரணிவரையீர்
இல்லஞ் சுரமச் சுரமேதன் னில்ல மெனக்கருதி
வல்லஞ்சு மென்முலை யாணடந் தாளென் வழிச்செலவைச்
சொல்லந் தணவனைக் கென்றுவெம் பாலைச் சுரத்திடையே.
(364)
நற்றாயறத்தொடு நிற்றலிற்றமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவற் குணர்த்தல்
கல்வளைத் தன்று புரமெரித் தார்கருங் காவியங்கட்
பல்வளைச் செங்கைக் கொடிபாகர் வெங்கைப் பனிவரையாய்
வில்வளைத் தம்பு பொழிந்தார்த் தெழுந்து வியன்சிலம்பைச்
செல்வளைப் புற்றது போல்வளைந் தாரெமர் தேரினையே.
(365)

362. வெறிமேவு-மணம் பொருந்திய. வெங்கானகம்-பாலை நிலம். நெறி-கற்புநெறி. மறி-மான். உண்கண்-மையுண்டகன். 363. மின்னைத்திருத்தலாவது-மின் விளங்குமாறு செய்தல். பரித்தல்-தாங்குதல். அதர்-அருநெறி. கலம்-மரக்கலம். நாய்கர்-வணிகர். கவலல்-துன்புறல். வழுவாநெறி-துறவறநெறி 364. அல்லஞ்சு கண்டர்-இருளும் அஞ்சுமாறு மிகக் கறுத்த கண்டத்தையுடையவர். வல்-சூதாடு கருவி. 365. கல்-மேருமலை. இறைவர் வளைத்தது பொன்மலையாயினும் சாதியொப்புமை கருதிக் கல் என்றார். செல்-முகில்கள். வில் வளைத்து-வானவில்லை வளைத்து.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்