முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பரந்தபுகழ்த் திருவெங்கைப் பழமலையார்
       தமைத்துதித்துப் பதத்து மென்பூச்
சொரிந்துபணிந் திரந்திடவு மெமக்கருளச்
       சிறிதுமுளந் துணிந்தா ரல்லர்
திருந்தவையிற் பித்தவென வைதுகல்லா
       லெறிந்துபொருஞ் சிலையான் மோதி
அரந்தையின்மெய்க் கதிதருதி யெனக்கேட்போர்க்
       கன்றியவ ரளித்தி டாரே.
(4)
மறம், எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
அளியாரு மலர்ப்பொழில்சூழ் வெங்கை யீச
       ரம்மலையி லெம்மூர்மான் பிடிப்போ மென்றுங்
களியாரும் வேடரியா மெம்ம கற்குக்
       கன்னிதனைத் தருகவெனக் கொடுத்த வெம்மை
எளியாரென் றொருதூதா மாது வேண்டி
       யிறைவர்திரு முகமெனமற் றொன்று தந்தாய்
ஒளியாம லுரையவன்யா ரியாங்க ளின்னே
       யுண்மையவன் றிருமுகங்கொண் டெய்து வோமே.
(5)
நேரிசைவெண்பா
மேதகைய வில்லிறைவன் வில்லிளவல் வல்வீரர்
காதனிக மற்றுங் கருதெவையும் - பாதத்
தொருவிரலாம் வெங்கையர னொன்றுமை யாசைப்
பருவரலாற் காணப் படும்.
(6)

4. பதத்து-திருவடிகளில், பித்தவென வைதவர் சுந்தரர். சிலையால் மோதி-கல்லால் அடித்து. வில்லால் அடித்து எனினுமாம். கல்லால் அடித்தவர் சாக்கிய நாயனார்; வில்லால் அடித்தவன் அருச்சுனன். அரந்தை இல்-துன்பமில்லாத. 5. அளி-வண்டுகள். எம்ஊர்மான்-எமது ஊரிலுள்ளமான்; மானைப் போன்ற பெண். எளியார்-எளிமையுள்ளவர்கள். 6. வில்லிறைவன்-இராமன். வில்லிளவல்-இலட்சுமணன். காது அனிகம்-கொலை செய்கிற படை. ஒருவிரலாம்-ஒருவிரலால் அடக்கியவன். பருவரல்-துன்பம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்