முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
கட்டளைக் கலித்துறை
இரவாம லொன்று மயலோ ரிடைச்சென் றிரப்பவர்க்குக்
கரவாம லென்று மிடரே புரியுங் கடும்புலனிற்
பரவாமல் வெங்கை புரிவாணற் கன்பறும் பாதகரை
விரவாம னின்றவர் தாமே பரகதி வேண்டினரே.
(82)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வேண்டுவார் வேண்டியதே யீவா னென்னும்
       வியன்றிருநா வுக்கரசின் மாற்றம் பொய்யோ
ஈண்டுவா வென்னைவலப் பாகந் தன்னி
       லிருந்துகென நினைவேண்டி யொழியா மையல்
பூண்டுவார் விழிததும்பு புனலோ டொன்றும்
       பொற்றொடிக்குந் திருவருள்செய் கின்றா யல்லை
நீண்டுவா னுலகளக்கும் பொழில்சூழ் வெங்கை
       நிமலனே யெமையாளு மமரர் கோவே.
(83)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கோபந் தோன்ற வதிர்ந்தெழுந்து கோக்க டொறுமின் வாள்வீசிச்
சாபந் தோன்ற வளைத்தொழியாச் சரமே பொழிந்து காரகிலின்
தூபந் தோன்று குழற்பகைதான் றோன்றிற் றிறைவன் றிருவெங்கைத்
தீபந் தோன்றும் புயனினைவைத் தீரா ரின்னும் வாராரே.
(84)
மேற்படி வேறு
வார்கொண்ட களபமுலை யுமைகணவன்
       றிருவெங்கை மகிழ்ந்த தேவே
ஏர்கொண்ட வுனதுமா ணிக்கமலைக்
       கருங்கொடியை யெரிப்ப தென்கொல்
கார்கொண்ட பசுங்காவின் மாவினிருந்
       தெங்கணமர் கடிய வந்தப்
போர்கொண்ட மதவேள்வந் துறக்கூவுங்
       கருங்குயிலைப் பொடித்தி டாதே.
(85)

82. கரவாமல்-ஒளிக்காமல். பரவாமல்-பொருந்தியிராமல். விரவாமல்-கலவாமல். 83. வியன்-வியக்கத்தக்க. “தூண்டு சுடரனைய சோதி கண்டாய்” என்னுந் திருத்தாண்டகம். மாற்றம்-மொழி. புனல்-கண்ணீர். 84. கோபம்-சினம்; பட்டுப்பூச்சி. கோக்கள்-திக்குகள்; பசுக்கள். மின் வாள் வீசு-மின்னலாகிய வாளை வீசி. சாபம்-அயலார் அலர் தூற்று; இந்திரவில். சரம்-அம்பு; நீர். தூபம்-புகை. குழற்பகை-முகில். புயல்நினைவு-கார்கால எண்ணம். 85. வார்-கச்சு. மாணிக்கமலை-இரத்தினகிரி யென்னும் வாட்போக்கி; இதில் பாலைக் கவிழ்த்த காகத்தை ஓர் இடையன் பொருட்டு இறைவன் எரித்தருளினார் என்பது தலபுராண வரலாறு. கொடி-காக்கை. அமர்கடிய-போரில் வருத்த. வந்துற-வருமாறு. பொடித்திடாது-எரிக்காமல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்