முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
கொச்சகக்கலிப்பா
பொடித்தமத னுயிர்படைத்துப் பொருவதுவும் வெவ்வரவங்
கடித்தமதி பிழைத்தனலங் கால்வதுவு மாமுனிவன்
குடித்தகடன் மறித்தெழுந்து குமுறுவது முன்னமுன்னைப்
பிடித்தவினைச் செயலன்றோ பிரிவில்வெங்கைப் பெருமானே.
(86)
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
மான்கொண்ட கரத்தர்திரு வெங்கைபுரத்
       தவர்பலகை வழங்கப் பெற்ற
தேன்கொண்ட விசைப்பாண ரெனநினைப்ப
       லுனைப்பாண சிறப்பு நீத்த
கான்கொண்ட தொடைப்புயத்தர் பெயர்மொழியா
       யெனிலவர்பேர் கழற லாற்றால்
ஊன்கொண்ட மழுவலத்தோ ரிசைக்குடைந்த
       பாணனென வுள்கின் றேனே.
(87)
கலிநிலைத்துறை
உள்ளே னன்பர் தங்களொ டன்போ டுறும்வண்ணம்
விள்ளேன் வஞ்சம் பொய்கொலை காமம் விடுகில்லேன்
எள்ளே னங்கம் வெங்கைபு ரேசா வெனநேயங்
கொள்ளே னெவ்வா றுய்குவ னந்தோ கொடியேனே.
(88)

86. வெவ்வரவம்-கொடிய இராகு கேது, அனலம் கால்வதுவும்-தீயைக் கக்குவதும். மாமுனிவன்-அகத்தியர். 87. தேன் கொண்ட-தேனின் இனிமையைக் கொண்ட. கான்கொண்ட தொடை-மணத்தைக் கொண்ட மாலை. இசைக்குடைந்த பாணன்-ஏமநாதன். உள்குதல்-எண்ணுதல். 88. உள்ளேன்-நினையேன். விள்ளேன்-நீக்கேன். எள்ளேன்-இகழேன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்