முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
தவம் எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கொடியவரை வனத்திருந்து நோற்கி னுந்தோட்
       கொற்றவரை யொத்தவரைத் துறந்து போகிப்
படியவரை மருட்டுதவ வேடந் தாங்கிப்
       படிமுழுது முலாவுகினு மறைக ளெல்லாம்
முடியவரை யறுத்துணர்ந்து புகலி னுந்தீ
       முளரிமலர்க் கரத்தெடுத்த வெங்கை வாணர்
அடியவரை வழுத்தியவ ரடிகள் சூடா
       வவலரையோர் பொருளாக வறிகி லோமே.
(89)
மேற்படி வேறு
அறிவினிலி லங்குதிரு வெங்கைநக ராள
       ரடியினின்மு யங்கியுறு மென்றனக வன்மை
எறியயிலை வென்றவிழி யின்கடையி னாலே
       யிமைவிழுமு னுங்கிமய றந்தமட மாதைப்
பொறியரவ ணைந்துதுயி லுங்கடவுள் கண்டாற்
       பொறியவனு ரந்தனிலி ருந்திடுவ ளோதான்
வெறிமலர்நெ டுஞ்சிலைய னங்கனெதிர் கண்டான்
       மிகுமிரதி கொங்கையவ னம்புயமு றாதே.
(90)
கட்டளைக் கலித்துறை
உறாதே சிறிய ரினம்பே ரருட்பய னுற்றவர்சொல்
மறாதே புலனிற் புகாதே திருவெங்கை வாணற்கன்பு
வெறாதே யுனக்கிடர் செய்கின்று ளோர்க்கிடர் மீண்டியற்றிக்
கறாதே யிருமன மேபிற வாநெறி காண்பதற்கே.
(91)

89. கொடியவரை-கொடியமலை. நோற்கினும்-தவஞ்செய்தாலும். படியவரை-உலகத்தார்களை. மருட்டு-மருளச் செய்கிற. வழுத்தி-போற்றி. அறிகிலோம்-மதிக்கமாட்டோம். 90. அகவன்மை-உள்ளத்தின் வலிமை. அயில்-வேல்.இமைவிழுமுன்-இமைக்குமுன். நுங்கி-கெடுத்து. பொறியரவு-புள்ளிகளையுடைய பாம்பு. பொறி-திருமகள். அம்புயம் உறாது-தோளைச் சேராது. 91. உறாது-பொருந்தாமல். கறாதே-சினவாதே. இரு-இவ்வாறிருப்பாயாக.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்