முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
யாவுமா முமையுண் ணாமுலை முலைப்பா
      லீந்துபா டச்செயா யெனினும்
மேவுமா துயர்செய் சூலைநோ யெனினும்
      விடுத்துநிற் பாடுமா றருளாய்
ஓவுமா னலது தொல்லுருக் கொளின்வே
      றொன்றெடுத் திடுமென நினைந்து
தாவுமா னினமெண் ணிகந்தசூழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(32)
விருப்பொடு வெறுப்பு மகன்றுபே ரின்ப
      வெள்ளத்து ளழுந்துநின் னடியார்
திருப்பத மிறைஞ்சி யவர்க்குவே ளாண்மை
      செய்பெருஞ் செல்வமே யருளாய்
பொருப்புக டொறும்வீழ் பொங்குவெள் ளருவி
      போன்றறி விலர்க்கிடை யறாமல்
தரிப்பருங் கருணை பொழிதருஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(33)
பொங்குறு கவினுங் கற்பும்வாய்ந் திலங்கு
      புண்ணிய மடந்தையும் பொருளும்
இங்குநன் குதவி யங்குவான் கதியி
      னிருத்துநிற் புலவரென் புகழார்
துங்கவெங் குறவர் புனத்திடு பரண்கா
      றுணித்துநட் டாரமீ மிசைமா
தங்கவெண் மருப்புப் பரப்புறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(34)
போழ்ந்திடு வடுக்கண் மகளிரை யணைத்துப்
      புகழ்நந்தி பிரம்படிக் கொதுங்கிச்
சூழ்ந்திடு மமரர் நெருங்குசந் நிதியிற்
      றொண்டனேன் வரவருள் புரியாய்
வாழ்ந்திடு மகக்கண் டுருகுதாய் முலைப்பால்
      வழிந்தொழு குதலென வடியார்
தாழ்ந்தெழ வருவி யொழுகுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(35)

32. ஓவுமான்-இம் மலைவடிவில் ஏந்தப்படாது தவிர்ந்தமான்; தொல்லுரு-பழைய சகளவடிவு. காத்தமை குறித்து நம்மையே தாங்குவரென மானினஞ் சூழ்ந்தன வென்பது. 33. வேளாண்மை-உதவி. மலைக்கணின்று அருவிகள் ஓடி உலகைப்புரப்பதுபோல, அருவியாகிய கருணை பொழிந்து அறிவிலரையுங் காப்பன் என்பது. பொருப்புகள்-மலைகள். 34. ஆரந்துணித்துக் கால்நட்டு எனஇயையும், ஆரம்-சந்தனமரம். மீமிசை-மேல். மீமிசை-ஒருபொருட் பன்மொழி. வான்கதி என்பது சிறந்த வழி. அது முத்திநிலையுமாம். கவின்-அழகு. அங்கு-மறுமையில். 35. மகளிரை யணைத்தல்-கூட்ட மிகுதியால் தம் மனைவிமார்க்கு ஊறு நேராமைப்பொருட்டு. மக-மகவு. தாய் மாட்டு அன்பின் சின்னமாக முலைப்பா லொழுகுதல்போல ஈண்டுஅருண்மிகுதிச் சின்னமாக அருவியொழுகும் என்க. போழ்ந்திடுவடு-பிளந்த மாவடு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்