முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
நேர்ந்திடு மொருசெங் கோல்கொடு கொடுங்கோ
      னிமிர்ந்திட விலங்கைசென் றடைந்தோன்
கூர்ந்தவன் பொடுநின் றிறைஞ்சுபு வழுத்துங்
      குரைகழ லிரக்கவஞ் சுவல்யான்
சேர்ந்திடு மலைமான் பெருமுலை யுவமை
      சிறுமலை களுக்குத வாமற்
சார்ந்திட விரும்பி வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(36)
தெருமரும் பிறவி தமையகன் றிடாத
      தேவரைத் தேவரென் றெண்ணி
அருமருந் தனைய நினையடை யாத
      வறிவிலார் பவப்பிணி யறுமோ
கரிமருங் கணைந்த தெனமுழை வாயிற்
      கார்வர விரைந்தெழுந் துகள்கே
சரிமறைந் திருந்து நாணுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(37)
ஆண்டுகம் பலசென் றிடவிருந் திடினு
      மன்றியோ ரிமைப்பினி லுடலம்
மாண்டுகு மெனினு நன்றுநின் கமல
      மலரடிக் கன்பரா யிருப்பிற்
பூண்டயங் கயில்வேற் குதலையந் தீஞ்சொற்
      புதல்வன்மே லிவர்செய லெனமார்த்
தாண்டவன்வந் திவர விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(38)

36. செங்கோலாகவென்பார் கொடுங்கோனிமிர்ந்திடவென்றார். செங்கோல் கொடுங்கோலென்பவை நீதி அநீதி மேலன. நிமிர்தல்-செவ்விதாதல். கழல்-ஆகுபெயர். இலங்கை சென்றடைந்தோன்-திருமால் கூர்ந்த-பொருந்திய. 37. தெருமரும்-அச்சந்தரக் கூடிய; உகள்-துள்ளி. பவப் பிணி-பிறவி நோய்; அச்சந் தரக்கூடிய பிறவிநோயை அறுக்காத தேவர்களை இறைவனாகக் கருதுபவர்கள் அறிவிலராவர். இறைவற்குப் பிறவிப் பிணி இல்லை என்பது. அருமருந்து-அமுதம். கரி-யானை. கார்-முகில். 38. திருவடிப்பத்தி சித்தித்தவர் சிவகதி பெற்றவரேயாகலின் அவருடலம் பன்னாளிருப்பினும் அன்றிச் சின்னாளிலொழியினும் அது பற்றிக் கவலையின்றென்பது. உகும்-ஒழியும். மார்த்தாண்டன்-கதிரவன். இவர-தவழ.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்