முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
விரைவிடை யிவரு நினைப்பிற வாமை
      வேண்டுநர் வேண்டுக மதுரம்
பெருகுறு தமிழ்ச்சொன் மலர்நினக் கணியும்
      பிறவியே வேண்டுவன் றமியேன்
இருசுடர் களுமேல் கீழ்வரை பொருந்த
      விடையுறன் மணிக்குடக் காவைத்
தரையிடை யிருத்தி நிற்றனேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(39)
ஒண்மணிப் பசும்பொற் பூணிள முலையார்க்
      குளத்திட மெலாமளித் தடியார்
கண்மணிக் கமையா விருந்துசெய் தருணீ
      கணமிருப் பதற்கிடம் புரியேன்
வெண்மணிக் கழைமுன் கரியநெற் றிதழி
      வேங்கைபொன் சொரியமா சுணங்கள்
தண்மணிப் பைக ளவிழ்த்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(40)
அருங்கலம் புனையு மகளிரோ ரிருவ
      ரணிமணம் புணர்த்திவா ரணமுந்
துரங்கமும் புலவர்க் குதவுநின் றனையே
      துதித்திடா துழன்றனன் வறிதே
மருங்குநின் றழகா லத்திதாங் குவபோன்
      மரைமலர்ப் பெருஞ்சுனை யொடுபூந்
தரங்கநின் றிலங்க விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(41)

39. பௌர்ணிமையில் சூரியன் அத்தகிரியை யடையுங்கால் சந்திரன் உதய கிரியிலுதித்தமர்வனாகலின் அக்காலஞ் சுட்டிவர்ணித்தபடி. காவென்பது காவப்படுதலிற் போந்தபெயர். அது காவடி யென வழங்கும். சூரிய சந்திரர்களையியக்கி இடை நிற்றலின் காவுவோர்க்கு உவமித்ததென்க. விரைவிடை-விரைந்து செல்லும் இயல்புடைய காளை. 40. கணம் என்பது ஒருசிறு கால அளவு. கழை-மூங்கில்கள்; நெற்று-முற்றிய காய் இறைவன் ஒரு கணமேனும் உளத்தின் கண் இருத்தற்கு இடஞ்செய்ய வேண்டும் என்பது குறிப்பு. மாசுணங்கள்-பாம்புகள். 41. கைலைக் கெழுந்தருளுதற்குத் திருவஞ்சைக்களத்தில் வாரணமும் இவ்வுலகிற் சஞ்சரித்தற்குத் திருநாகைக்காரோணத்தில் துரங்கமும். உதவியதென்க. தாமரைமலர் அலங்கார தீபத்திற்கும் தரங்கம் கைக்கும் சுனை தாங்குவோர்க்கும் ஒப்பு. அழகாலத்தி, அழகிய நீராஞ்சன மெனக்கொண்டு, சுனை தட்டும், செந்தாமரை மலர்ப்பரப்பு செந்நீரும், அப்பரப்புத் தரங்கத்தாலசைதல் அந்நீரினசைவு மாக்கலும் ஒன்று. தரங்கம்-அலை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்