முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
ஏணுறு மமரர் கடைகட லளித்த
      விருளொடு மணிமிடற் றடியேன்
ஆணவ விருளுங் கலந்திடிற் கருமை
      யழகுமிக் கிலங்குறுங் கண்டாய்
மாணெழில் வராக முழும்புழை யனந்தன்
      மணியொளிப் பிழம்பெழல் சிறுதீத்
தாணுவின் முருக னெழுதனேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(42)
மின்னவிர் சடிலக் கற்றையு மருள்கூர்
      விழிகளுந் திருமுகத் தழகுங்
கன்னவி றிரடோ ணான்குமீ ரடியுங்
      கண்டுகண் களிக்குநா ளுளதோ
இன்னிசை யொலிகேட் டுருகுதல் கடுப்ப
      விழிதர வருவிகிம் புருடர்
தன்னிக ரிசைகூர் சாரலஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(43)
அள்ளிவெண் டிருநீ றுடன்முழு தணியு
      மடியவர்ப் பெறினெழுந் திளங்கன்
றுள்ளிநின் றுருகு மன்னையின் மனநெக்
      குருகுபு சென்றிறைஞ் சிலனே
எள்ளிவெம் புலியெண் கரிதிரு மேனி
      யேறுத றகாதென வெகுண்டு
தள்ளிவந் தருவி யிழிதனேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(44)
இழையெனத் தளர்சிற் றிடையுணா முலையா
      ளெனக்குவண் புகலிவேந் தயின்ற
கழுமணிப் பசும்பொற் குலவுபாற் கிண்ணங்
      கழுவுநீர் வார்ப்பதற் குரையாய்
முழையிடைக் கதிர்மா மணிவிளக் கேற்றி
      முசுக்கலை பிணாவொடு மசோகத்
தழையிடைத் தழுவி யுறங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(45)

42. மணியொளித் திரட்சி, பெரிய தீத்தம்பமாயமரும் சிவபெருமானருகே சிறிய தீத்தம்பமாக முருகக் கடவுளெழுதலொக்கும் என்பது. இருளொடு கலந்திடில் மிடற்றுக் கருமை யழகு மிக்கிலங்குறும் என இயையும். மிடற்றுக் கருமை நஞ்சினால் ஆகியது. ஏண்-உயர்ச்சி. அனந்தன்-ஆதிசேடன். 43. சடிலம் என்பது சடை; “கல் நவில்” என்பதில் நவில் என்பது உவமவுருபுமாம்; இறைவனது உருவ அமைப்புகளின் அழகைப் பார்த்து மகிழ வேண்டும் என்பது கருத்து. 44. தள்ளி வந்திழிகலொக்கும் அருவி யென்க. பெறின்-காணப் பெற்றால். எள்ளி-இகழ்ந்து. 45. முசு-குரங்கினுளொரு சாதி. கலை-ஆண். பிணா-பெண். பிணாவொடுஉறங்குறுமென இயையும். அயின்ற-உண்ட.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்