முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
பன்னிரு சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
நயன மிருண்டு போகாமுன் னடனப் பெருமான் றனைப்பாரார்
       நடக்கும் பதங்க டளராமுன் னடவா ரமலன் றிருக்கோயில்
பயனின் மொழிகள் குளறாமுன் பரம னடித்தா மரைதுதியார்
       பழுதில் செவிகள் செவிடாமுன் பரிந்த சிவன்மெய்ப் புகழ்கேளார்
செயலி னெடுங்கை நடுங்காமுன் றிருமா மகளுங் கலைமகளுஞ்
       செறியுந் திருவெங் கைக்கரசைச் செழுமென் மலர்கொண் டருச்சியார்
மயலி லழுந்தி யயராமுன் மனத்தி லவனை யிருத்திடார்
       மனித ருழன்று வாளாபோய் மறியா நரகின் மறிவாரே.
(96)
பதினான்கு சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
மருக லம்பர்களர் நின்றி யூர்மிழலை வல்லம் வேதிகுடி சேய்ஞலூர்
       மறைசை காசிதிரு நாவ லூர்கயிலை மயிலை கற்குடிநல் லூர்நணா
அருணை பஞ்சநதி திங்க ளூர்பனசை யதிகை யொற்றிதிரு நாரையூ
       ரால வாய்திருநெல் வேலி வஞ்சிபழை யாறை கச்சிதிரு வாதவூர்
சிரபு ரங்கமலை முல்லை வாய்சுழிய றிருவ ரத்துறையு மேபுகார்
       திருவ லஞ்சுழிந ளாறு வேதகிரி தில்லை மாணிகுழி யாதியாய்
விரவு கின்றபதி பலவி னங்குடிகொள் விமலன் வந்துதன தருளினால்
       விமல சங்கரியொ டுறையும் வெங்கைநகர் மேவு வாரமர ராவரே.
(97)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
ஆவியி னிடத்துற் றெம்முகப் பகையென்
       றம்புயத் தினைப்பிடித் திழுப்ப
மேவுவெண் பற்சொற் பகையெனு மணிகள்
       வெருவிவந் தடியின்மேல் வீழக்
காவியங் கருங்கட் பகையெனு மளிகள்
       கலங்கியெண் டிசைதொறு மிரியப்
பூவையர் மகிழ்வுற் றுலாவுறும் வெங்கை
       புரத்தனெங் கருத்தன்வே றிலையே.
(98)

96. நயனம்-கண். பதங்கள்-கால்கள். உழன்று-வருந்தி. மறியா-திரும்பாத. மறிவார்-சுழலுவார். 97. மருகல்-திருமருகல். பஞ்சநதி-திருவையாறு. புகார்-காவிரிப்பூம்பட்டினம். விமலசங்கரி-தூய்மை மிக்க இறைவி. 98. ஆவி-தடாகம். அம்புயம்-தாமரை. வெருவி-அஞ்சி. காவி-கருங்குவளை. இரிய-அஞ்சியோட.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்