முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
130    பிள்ளைப் பழியாளர் பெண்பழியை யஞ்சுவரோ
     எள்ளத் தனையேனு மின்றென்பார் - உள்ளுக்
     குருகுவார் நெற்றிபுடைத் தோவிதியே யென்பார்
     பருகுவார் போலிறையைப் பார்ப்பார் - முருகுவாய்
     தங்கமுத மும்பெறார் தாழ்குழலிற் பூப்புனையார்
     எங்கள் விழிக்கிவர்தாம் யாரென்பார் - பங்குவரும்
     ஆர மணிமார் பணையக் கிடைத்தாலும்
     பார முலைக்ககலம் பற்றுமோ - நேருகினுங்
     கங்கையறி யாமற் கலக்கு மிமையமலை
     மங்கையறி யாமல் வருவரோ - மங்கை
(131)
135   அறியாமற் கங்கை யணையு மவரென்
     நெறியால் வராரென்று நிற்பார் - குறியா
     இணைவிழியா னோக்கா ரெனினு நுதன்மேல்
     அணைவிழியா னோக்கினமா மென்பார் - கணைவிழியார்
     ஏந்திளங் கொங்கை யிடைவருத்தன் மாத்திரையாய்ப்
     போந்தன வென்று பொருமுவார் - நாந்தவஞ்செய்
     தில்லோ மதனா லினையாம லென்செய்ய
     வல்லோ மெனத்திகைத்தார் மற்றொருத்தி - நல்லோர்
     
     பேதை
     
     பொதும்பர் வனம்யாம் புகவோ மிவடான்
     பெதும்பையா முன்னமெனும் பேதை - குதம்பை
(136)
140   விழிமேவுங் காதுதோண் மேவப் புனைவாள்
     மொழிமேவும் வீணை முனிவாள் - பழிமேவுங்
     கல்லார் பரன்முற் கரத்தல்போற் றன்கண்மூய்
     எல்லார் முனுங்கரந்தே னென்றிருப்பாள் - பொல்லாத
     வெம்பு பகையாகி மேல்விளைவ தோராமல்
     அம்புலியை வாவா வெனவழைப்பாள் - செம்பொனுயர்
     தெற்றிமிசை மென்னடைய தென்றல் வரவேற்றுச்
     சற்றுமுள மஞ்சாது தங்குவாள் - பற்றுதவு
     தன்பெருமை பொன்னறியாத் தன்மைபோற் பெண்ணரசாந்
     தன்பெருமை தானறியாத் தன்மையாள் - பொன்பரிவின்
(141)

131.130-135. பிள்ளைப்பழியாளர்-சீராளனைக் கொன்று பழி தேடியவர். பருகுவார்-எடுத்து விழுங்குபவர். ஆரம் மணிமார்பர் - மாலைகளையணிந்த அழகிய மார்பையுடையவர். அகலம்-இறைவருடைய மார்பகலம். 136.135-140. கணைவிழியார்-அம்பைப்போன்ற விழியை உடையவர்கள். பொருமுவார்-மனங்குமுறுவார்கள். இனையாமல்-வருந்தாமல். பொதும்பர்-மரச்செறிவு; மரப்பொந்து. குதம்பை-காதணி. 141.140-145. பரன்-கடவுள். கரத்தல்-மறைத்தல். மூய்-மூடிக் கொண்டு. தெற்றி-திண்ணை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்