முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
14. குறுங்கழிநெடில்
அன்பினுக் கன்றி நான்புனை மலருக்
      கருளுவை யலைமலர்க் கருளின்
முன்பெடுத் தெறிந்த சாக்கியன் கல்லின்
      முருகலர் மிகவுமின் னாதோ
துன்பமுற் றிடுசிற் றின்பவெவ் விடயந்
      துறந்துளோர் மனத்தெழு தருபேர்
இன்பநற் கடலே யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே,
(7)
ஆடுற வடியேன் புதுக்குடந் தருநீ
      ரன்பன்வாய்ப் புனலுனக் காமோ
கூடையின் மலர்பித் தையிற்றரு மலரோ
      கூறுமென் கவியவன் மொழியோ
நாடரு மொருநீ யிறையெனும் வழக்கை
      ஞானசம் பந்தனாற் றிட்ட
ஏடுரை செய்ய வென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(8)
மெய்யுறு பிணிக்கு விலக்குவ வொழித்து
      விதித்தன கொள்ளுவன் பிறவி
மையுறு பிணிக்கு மவ்வகை செயாமல்
      வருத்துமந் நோயிடைப் படுவேன்
பெய்யுறு வளைக்கைத் திருநுத லுமையாள்
      பெருவிழிக் கணைகொடு விடாமல்
எய்யுறு முரத்தோ யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(9)
சரிப்பினு மொருபா லிருப்பினு முறக்கச்
      சார்வினும் விழிப்பினு மொருசொல்
உரைப்பினும் போக நுகர்வினு மாவி
      யொழிவினு நின்னையான் மறவேன்
விருப்புறு மலரும் விரையுமே போல
      விம்மியெங் கணுமுறு பொருளாய்
இருப்பினு மரியோ யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(10)

7., அலை-அல்லை, முருகலர்-மணம் பொருந்திய மலர், 8. ஆடுற-நீராட. அன்பன்-கண்ணப்பன். பித்தை-கூந்தல். 9. மெய்-உடல். மையுறு-மயக்கம் பொருந்திய. பெய்யுறு-இடப்பட்ட. உரத்தோய்-மார்பையுடையவனே. 10. சரிப்பினும்-சுற்றித் திரிந்தாலும். ஆவி யொழிவு-சாக்காடு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்