முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
[தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிற் கிடத்தி அஃது உறங்குமாறு இனிய பாடல்களைப் பாடுவதாகும். தால் என்பது நா. நாவினை யசைத்துப் பாடுதலின் ‘தாலாட்டு’ என்று காரணப் பெயராயிற் றென்பர். பிற பாடல்களும் நாவினை யசைத்துப் பாடப்படுவனவேயாயினும் இப்பெயர் சிறப்பாகக் குழந்தைகளின் பாடல்களிலேயே பயன்படுத்தப்படுகிறது. தமிழில் கீதாசாரத் தாலாட்டு, தத்துவராய சுவாமிகள் திருத்தாலாட்டு முதலிய தாலாட்டு நூல்கள் உள்ளன. இத்தாலாட்டில் அடிகளார் சிவஞானபாலைய சுவாமிகளைக் குழந்தையாகப் பாவித்துத் தத்துவ ஞானப் பொருள்களை அமைத்துப் பாடியுள்ளார்.]
காப்பு

நேரிசைவெண்பா
அவஞானம் போக்கி யருண்ஞான மாக்கும்
சிவஞான தேவன் றிருமுன் - தவஞானத்
தாலாட் டெனுந்தமிழைச் சாற்றுதற்கு நற்றுணையாம்
மாலாட்டு மாமுகத்தன் வந்து.
 
திருவருளா லென்னைத் தெரிவிக்க விளங்குந்
திருவுருவாய் வந்த சிவஞான தேசிகனோ.
(1)
என்றுநித்த பூரணமா யின்பவறி வுண்மையாய்
நின்றபடி நிற்கு நிகழ்பிரம மென்றானோ.
(2)
தன்சத்தி யாலாந் தலமங்க லிங்கமென
என்சத்தி பாதத் தெழுந்தருளிச் சொன்னானோ.
(3)
நண்பாகு மிட்டலிங்க நன்றாம் பிராணலிங்கம்
ஒண்பாவ லிங்கமா மோர்பொருளிங் கென்றானோ.
(4)
ஆசார லிங்கமுட னாருங் குருலிங்கந்
தேசாரு மிட்டலிங்கஞ் சேர்ந்தாகு மென்றானோ.
(5)
அந்தப் பிராணலிங்கத் தாகுஞ் சிவலிங்கம்
இந்தச் சரலிங்க மென்றசிவ ஞானியோ.
(6)
பாவலிங்கந் தன்னிற் பரமப் பிரசாதந்
தாவகன்ற மாலிங்கஞ் சார்ந்துவரு மென்றானோ.
(7)
ஏகாங்க மேயாகு மின்பத் தியாகாங்கம்
போகாங்கம் யோகாங்கம் போற்றியறி யென்றானோ.
(8)
பத்தனுமா கேசனுமாம் பன்னுந் தியாகாங்கம்
உய்த்துணரி னென்ன வுணர்த்தும் பெருமானோ.
(9)
பிரசாதி யோடு பிராணலிங்கி யாகும்
உரைசாரு போகாங்க மொன்றென்று சொன்னானோ
(10)

(காப்பு) அவஞனம்-வீணறிவு அருள்ஞானம்-மெய்யறிவு. மாலாட்டும்-மயக்கங்களையெல்லாம் ஆட்டுவிக்கின்ற. 1. என்னைத் தெரிவிக்க-நான்யார் என்பதை எனக்குப் புலப்படுத்த. 2. நித்த பூரணம்-என்றும் நிறைபொருளாகவிளங்குவது. 3. தன்சத்தி-தன்னுடைய மெய்யறிவுத் திறம். 4. இஃது இலிங்கங்களெல்லாம் ஒன்றென்றது. 5.இவைகளும் சிவலிங்க வகைகளையே கூறுகின்றது. 6. இவைகளும் சிவலிங்க வகைகளையே கூறுகின்றது. 7. தாவகன்ற-குற்றமற்ற. 8. இஃது அங்கங்களைப்பற்றிக் கூறுகிறது. 9. பத்தன்-அடியவன். மாகேசன்-இறைவன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்