முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
துன்னுறு துயரப் பிறவிவெங் கொடுநோய்
      தொலைப்பினுந் தொலைத்திடா துறினும்
நின்னடி மலரை யன்றியான் மறந்து
      நினைப்பனோ விறக்கும்வா னவரை
மன்னளி பருக வுடையிறான் மதுவும்
      வாரண மதமும்வெள் ளருவி
தன்னொடு மிகலி யொழுகுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(52)
நீரினா லழலால் வருங்கொடும் பிணியா
      னிருதரா லலகையால் விலங்காற்
சோரரால் வருந்து மவரலர் நினது
      தூயநா மம்புகன் றிடுவார்
சீருலா மணியா லரிபர வுதலாற்
      றிசையுற நீள்கையா லெழின்மை
சார்தலா லுமையாள் விழிநிகர் சோண
     சைலனே கைலைநா யகனே.
(53)
முகவிளக் கென்ன மணிக்குழை மிளிர
      முலைமுகட் டணிபெற மலராள்
பகல்விளக் கென்ன வொளிகெட வரும்பொற்
      பாவையர்க் கிரங்கிடா தருளாய்
அகவிளக் கென்ன வகறிரி நெய்தீ
      யாக்குவோ ரின்றியே யெழுந்த
சகவிளக் கென்ன விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(54)
நீலியோ டுனைநா டொறுமருச் சித்து
      நின்றொழில் புரிந்திட வுடற்குக்
கூலியோ தனமென் றளிப்பவர்க் கன்றிக்
      கூற்றினைக் கடக்குமா றெளிதோ
மாலியோ சனையின்வணங்குறுங் கைலை
      மலைநிவே தித்திடக் குவித்த
சாலியோ தனமென் றிடத்திகழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(55)

52. இகலியொழுகல்-நிறம், வேகம், இடையீடின்மைகளின் மாறுபட்டுப் பெருகல். துன்னுறு-பொருந்திய. இறால்-தேனடை. இகலி-மாறுபட்டு. 53. சீர்உலாம் மணி-கனம் வாய்ந்த அரதன மணியும், பொலிவமைந்த கண்மணியும்; அரி-சிங்கமும், செவ்வரியும்; திசை-திக்கும், நோக்கமும்; எழில்-மை-எழுச்சியுடைய மேகமும், அழகியமையும் ஆம். எழில் எழுச்சியாங்கால். அலகை-பேய். 54. மிளிர பெற கெட வரும் என்க. அகம்-இல்லம். மலராள்-திருமகள். சகவிளக்கு-உலக விளக்கு. 55. நீலி-நீலநிற வடிவத்தையுடைய உமாதேவி. பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையேனும், முத்திசித்திக்கும் வரையும் கடவுள் வழிபாட்டிற்குவேண்டப்படுதலின் அதன் பொருட்டு ஓம்புவார்க் கல்லது போகாதியனுபவத்தின் பொருட்டு ஓம்புவார்க்குக் கூற்றைக்கடத்தலரி தென்பதாம். திருமாலும் நெடுந் தூரத்தினின்று வணங்கும் கைலை தமக்கெதிர்குவித்த அன்னக்குவியல்போன்று விளங்கத் திகழுஞ் சோணசைலரென்க. ஓதனம்-சோறு. சாலி யோதனம்-நெற்சோறு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்