முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
தோற்றிடும் பிறவி யெனுங்கடல் வீழ்ந்து
      துயர்ப்பிணி யெனுமலை யலைப்பக்
கூற்றெனு முதலை விழுங்குமுன் னினது
      குரைகழற் கரைபுக விடுப்பாய்
ஏற்றிடும் விளக்கின் வேறுபட் டகத்தி
      னிருளெலாந் தன்பெய ரொருகாற்
சாற்றினு மொழிக்கும் விளக்கெனுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(56)
கந்தர மிருந்து மடகுநீ ரயின்றுங்
      கரநிலத் தமைத்திரு பதமும்
அந்தர நிமிர்ந்து நின்னிலை யறியா
      ரரும்பவ மொழியுமோ வுரையாய்
இந்திரன் வனத்து மல்லிகை மலரி
      னிண்டைசாத் தியதென நிறைந்த
சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(57)
கூம்புறு கரமு மலர்ந்திடு முகமுங்
      கொண்டுநின் றனைவலம் புரிவோர்
மேம்படு சரண மலர்ப்பொடி மேனி
      மேற்படிற் பவம்பொடி படுமே
பூம்பொழிற் புகலிக் கிறைவனா னிலஞ்சேர்
      புண்ணியத் தலங்களி னடைந்து
தாம்புனை பதிகந் தொறும்புகழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(58)

56. புறவிருளை ஓட்ட ஒளி வேண்டுவது போல அகவிருளை யோட்ட இறைவனாகிய ஒளிவேண்டும். ஆகவே இறைவனை ‘விளக்கு’ என்றார். ஆதலால், அகவிருளை யொழிக்க இறைவன் பெயரை ஒருமுறை கூறினும் போதுமென்பார் ‘அகத்தின் இருளெலாந்தன்பெய ரொருகாற்சாற்றினும் ஒழிக்கும் விளக்’ கென்றார் என்க. ஏற்றிடும்-இல்லங்களில் ஏற்றப் பெறுகிற. குரைகழல்-ஒலிக்கும் வீரக் கழல். 57. நிலையாவது ஆன்மாக்களுக்கு வீடு பேறளித்தற் பொருட்டு நிக்கிரகானுக்கிரகம் பூண்டு நிலவு மியல்பு. கந்தரம்-குகை. அடகு-இலை. அயின்றும்-உணவாகக் கொண்டும். 58. ஆளுடைய பிள்ளையார் பதிகந்தோறும் புகழ்ந்தது ஒன்பதாவது திருப்பாடறோறுங்காண்க. கூம்புறு-குவித்தல்பொருந்திய. பவம்-பிறப்பு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்