முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
அறியா தொருநா ளறையினும்வன் பாசஞ்
செறியா தருளுந் திருப்பே ருடையானோ.
(71)
பூதமுத லெல்லாமும் போக்கியவற் றுண்மறைந்து
ஞாதிருவா மென்னை நயந்தறிவித் திட்டானோ.
(72)
எந்தைசிவ சாதனங்கட் கெல்லாந் திருநீறு
முந்தியதென் றுண்மை மொழியும் பெருமானோ.
(73)
உருத்திரனே யையமிலை யோருருத்தி ராக்கந்
தரித்தவ னென்றெமக்குச் சாற்றும் பெருமானோ.
(74)
ஒண்மறையின் கண்ணா முருத்திரமவ் வஞ்செழுத்துங்
கண்மணியென் றையமறக் காட்டு மருட்கடலோ.
(75)
அருவாகி நின்றசச்சி தானந்த வீசன்
குருவாகித் தன்னைக் கொடுக்குமெனச் சொன்னானோ.
(76)
பரம சிவமெனவும் பண்டைமறை போற்றும்
பிரமமென வும்பேர் பெறுமிலிங்க மென்றானோ.
(77)
திரஞ்சரமென் றீசன் றிருவுருவி ரண்டுள்
பரஞ்சரமென் றோதும் பவளவா யண்ணலோ.
(78)
அங்கம் புனைவோ னடிப்புனலல் லாதுபவப்
பங்கங் கழுவப் படாதென்று சொன்னானோ.
(79)
அந்தக் கரணத் தழுக்கறுப்ப தெங்கள்பரன்
சந்தப் பிரசாதந் தானென்று சொன்னானோ.
(80)

71. அறியாது-பலனூண்டாகுமென்று உணராமல். செறியாது-பொருந்தாமல். 72. நயந்து-விரும்பி. அறிவித்திட்டானோ-உண்மைப் பொருளை உணரச் செய்தவனோ? 73. எந்தை-எம் தந்தையாகிய சிவபிரானுடைய. முந்தியது-முதன்மையானது. 74. ஓர் உருத்திராக்கம்-ஒரு சிவமணி. 75. ஒண்மறை-பெருமை பொருந்திய மறை. 76. அருவாகி-வடிவமற்றதாகி. தன்னைக் கொடுக்கும்-மெய்யறிவைத் தரும். 77. பரமசிவம் பிரமம் எல்லாம் ஒன்றென்றபடி. 78. திரம்-நிலைபேறு. சரம்-போக்குவரவு. 79. அடிப்புனல்-திருவடிநீர். பவப்பங்கம்-பிறவியாகிய அழுக்கு. 80. அந்தக்கரணம்-மனம் புத்தி சித்தம் அகங்காரம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்