முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
தருணமதிற் சீறுந் தனிவிழிகாட் டாமல்
கருணை குடியிருக்குங் கண்களொடு வந்தானோ.
(81)
ஏரூருந் தான்வா ழிடமேநற் காசியுந்தென்
ஆரூரு மம்பலமு மாக்குசிவ ஞானியோ.
(82)
தன்பாத தாமரைதோய் தண்புனலே கங்கையாய்
வன்பாச நீக்க வழங்குசிவ ஞானியோ.
(83)
மண்படைத்த நான்முகனார் மானுடர்த மொண்முகத்தில்
கண்படைத்த பேறுபெறக் காட்டு முருவானோ.
(84)
ஆர்க்குங் கொடுநோ யனைத்துங் கடைக்கண்ணால்
தீர்க்குங் கருணைச் சிவஞான தேசிகனோ.
(85)
செப்ப முறவெனது சிந்தைவீட் டாசையெனுங்
குப்பை துகைத்துக் குடியிருக்க வல்லானோ.
(86)
தன்னையரு ளாளனெனுந் தன்மை யுலகறிய
என்னையடி யாரோ டெழுந்தருளிக் காத்தானோ.
(87)
மெய்த்த வறிவாம் விளக்குகதை யொன்றெடுத்துத்
தத்துவமா மட்கலத்தைத் தாக்கும் பெருமானோ.
(88)
வழுவின்றித் தன்மா வலியுலக மேத்த
மழுவின்றிப் பாவ மரமெறிய வந்தானோ.
(89)
இணையாது மில்லா விடர்ப்பவவே லைக்குப்
புணையாக வந்தருளும் புண்டரிகத் தாளானோ.
(90)

81. தருணம்-சமயம். 82. ஏர் ஊரும்-சிறப்புப் பொருந்தியிருக்கும். தென்ஆரூர்-அழகிய திருவாரூர்; தெற்குத் திக்கில் உள்ள திருவாரூருமாம். அம்பலம்-தில்லைமூதூர். 83. வன்பாசம்-வலியபந்தம். 84. கண் பெற்றதன்பலன் அடிகளாரைப்போற்றி வழிபடல் என்க. மண்-உலகம். 85. ஆர்க்கும்-பிணித்து வருத்தும். 86. ஆசையெனுங் குப்பை-அவாவென்னுங் குப்பை. துகைத்து-அழித்து. 87. அருளாளன்-திருவருளை ஆட்சிசெய்து அடியவர்கட்கு நன்மை விளைவிப்பவன். 88. மெய்த்த-உண்மைத் தன்மை பொருந்திய. கதை-கதாயுதமென்னும் ஒரு படைக்கலம். 89. மழு-கோடரி. பாவமரம்-தீவினையாகிய மரம். 90. இடர்-துன்பம். பவவேலை-பிறவிக்கடல். புணை-தெப்பம். புண்டரிகம்-தாமரை

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்