முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
காளம் புரைந்தநெட் டுடலழற் கட்கொடிய
       காலன்வந் தான்வந்தனன்
கண்டவா றிஃதுரைத் தனமுரைத் தனமென்று
       கைதட்டி விடுவதென்ன
வேளம்பு தைத்தலறும் வன்னெஞ்ச ரிவ்வுலக
       மெய்யென்ப திலையென்பவர்
விரிசடைக் கடவுளடி யவர்வரவு கண்டுள்ள
       மிக்கெழு மகிழ்ச்சியென்ன
வாளம்பு யத்துணர்ப் பதமுக்க ணிறைபுக
       ழழித்தபுன் சமயமென்புள்
ளணிகடிவ தென்னமழ விடையொன் றுகைப்பவ
       னரியபுகழ் பாடியாடத்
தாளம் புடைப்பதற் கடியிட்ட தென்னநீ
       சப்பாணி கொட்டியருளே
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
       சப்பாணி கொட்டியருளே.
(1)
மொண்டுபொய்ப் பொருளென்று பொருளையிர வலர்வரின்
       முத்திரைசெ யாமலுதவி
முழுமறைப் பொருளைமெய்ப் பொருளென்று தொண்டர்க்கு
       முத்திரைசெய் தீங்கருள்வது
விண்டுமது மடைதிறந் தொழுகுபைங் கொன்றைபுனை
       விரிசடைக் கற்றைநெற்றி
விழியுடை யவர்க்கலது குவியாத திலையென்று
       விரியாத தேதிலார்முன்
கொண்டவெம் பவநீறு படநீறு தன்னைக்
       கொடுப்பது நடுங்கவாவி
கொள்ளைகொண் டுண்ணவெம் பால்வருங் கொடியவெங்
       கூற்றைத் தடுப்பதாய
தண்டளிர் கவற்றுநின் கையினா லையநீ
       சப்பாணி கொட்டியருளே.
தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே
       சப்பாணி கொட்டியருளே.
(2)

1. காளம்-நஞ்சு. புரைந்த-ஒப்பான. வேளம்பு-காமன் கணை. புள் அணி கடிவது என்ன-பறவைக் கூட்டத்தைத் துரத்துவது போல. விடையொன் றுகைப்பவன்-காளை யொன்றைச் செலுத்துபவன். அடியிட்டது-அடிப்படை செய்து வைத்தது. 2. மொண்டு-அள்ளி. முத்திரை செயாமல்-பாதுகாப்புச் செய்யாமல். பவம் நீறு பட-பிறவி அழிந்தொழிய. ஆவி-உயிர். கவற்றும்-வருத்தும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்