முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
கருவி யுடல்பொறி பூத முதலன முற்றுமே
       கழல்பு தனியறி வாகி யொருபிர மத்துநாம்
விரவி யதுவடி வாயி னமெனுமொர் சுட்டுமே
       விளிய வரவொடு சேற லருகயல் கொட்புறா
அருவ முருவமி லாத நிலையொர்க ணத்துளே
       யருளு மொருமொழி யாள திருவளர் கச்சியூர்
மருவு பெருகருள் வாரி பணிமணி முத்தமே
       மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.
(7)
நிறையு மருண்மழை மேக மெனவும றுப்புறா
       நிதிய வளையொடு தாம ரையெனவும் வற்றுறா
துறையு மலிதயை வாரி யெனவுநி னைப்பரா
       யுணர்வு தருகலை யோதி யுணர்வும யக்கிலார்
அறையு மொழிகொடு மேவி நினையிரந் துற்றுநா
       மலதுபிறர் தமை யாது மருவியி ரக்கிலேம்
மறையி னிலைதவிர் யோகி பணிமணி முத்தமே
       மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.
(8)
குதலை மொழிமருள் பேதை பிலநதி மட்டுவார்
       குவளை மதர்விழி மாலை மதியைம ருட்டுவாள்
நுதலை வழிபட வேகி மறியும்வி யப்பொடே
       நுவலி லளவில வாகும் வளமலி கச்சியாய்
திதலை முலைமட மாதர் கொடுமய லிற்படார்
       திகழு மனமுடை வாய்மை நெறியறி ஞர்க்கெலாம்
மதலை யெனவரு தூய பணிமணி முத்தமே
       மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.
(9)
இயலு மொருகுட வானை யதனுளி ருக்கவா
       னெனவ றிவுறவு பாதி யறவறி வித்தல்போல்
உயலி லுடலிலுண் மேவு முயிர்பிர மத்தின்வே
       றொழிய வொருபொரு ளாகு மெனவறி வித்தவா
செயலொ டுரைமனம் யாவு மதியம ருட்டுமோர்
       திலக நுதலுமை பாகர் பணிசெய வுய்த்துவாழ்
மயலி லடியவர் நேச பணிமணி முத்தமே
       மயிலை வருசிவ ஞானி பணிமணி முத்தமே.
(10)

7.கழல்பு-கழன்று. விரவி-கலந்து. அது வடிவாயினம்-பிரமவடிவானோம். 8. நிதியவளை-சங்கநிதி. தாமரை-பதுமநிதி. வற்றுறாது-வற்றாமல். 9. பிலநதி-கம்பை. மதியை மருட்டு-திங்களை மருளச் செய்கிற. நுவலில்-கூறினால். திதலை-தேமல். மதலை-குழந்தை. 10. உயலில்-நீண்டு வாழ்தலில்லாத. மதியம் மருட்டும்-திங்களை மருளச் செய்யும். பணிசெய-திருப்பணிகளைச் செய்ய. மயல்இல்-மருட்சியில்லாத.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்