முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
செக்குறு திலத்தின் வருந்துபு பிறக்குஞ்
      செல்லலு நாடியின் பிணிப்பு
நெக்குற வறிவு கலங்குசாக் காடு;
      நினைதொறு முளம்பதைக் கின்றேன்
மொய்க்குறு முகில்கண் டரிகரி யென்னு
      முழக்கமு மரகர வென்னுந்
தக்கவர் முழக்கு மெதிரெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(68)
மரணமும் பிறவித் துயருநீங் குறநூல்
      வாய்ச்சிலம் பிக்கருள் புரிந்த
கருணியென் றுனைவந் தடைந்தன னினிநின்
      கருத்தினை யின்னதென் றறியேன்
முரணிபம் பரூஉக்கை தலைமிசை யெடுப்ப
      முழைக்கரும் பாம்பென மணித்தேர்த்
தரணியுள் வெருவி யகன்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(69)
அங்கையின் வைத்த கூர்ங்கனன் மழுவா
      லருவினைக் காடற வெறிந்து
மங்கலில் பத்தி வித்திட வடியேன்
      மனத்தினைத் திருத்துநா ளுளதோ
பொங்குறு செக்கர் கருவிசும் புறவேள்
      புரத்தெரி கதுவிட நோக்கித்
தங்குத லொப்ப நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(70)

68. அரி-சிங்கம். கரியென்னு முழக்கம்-கரியெனக் கொண்டு ஆரவாரிக்கும் முழக்கம். இது அரிகரியென்னு முழக்கமும் அரகரவென்னுமுழக்கமும் இகலி யெழுமென முரண்படநிற்பதும் ஓர்க. திலம்-எள். செல்லல்-துன்பம். 69. சிலம்பிக்கருளியது சீகாளத்தியிலும் திருவானைக் காவிலும். கருணி-கருணையுடையவன். முரண்-வலிமை. தரணி-சூரியன். இபம்-யானை. 70. கரு விசும்புற நின்றிடுமென இயையும். கருவிசும்பு மன்மதனக்கும், செக்கர் அவனுடலிற்பற்றிய தீக்கும் ஒப்பு. மங்கல்-குறைதல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்