முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
இரவடைவை நீயிரவை யடையா னிவன்கலை
       யெண்ணிரண் டுடையையிவனெண்
ணெண்கலை கடந்தவன் மறுவுண் டுனக்கிவற்
       கில்லையா லோர்மறுவுநீ
மருவுமரை நாணிலவை யிவனென்று மழியாது
       வருபெரும் புகழ்நிலவினான்
வளர்குழவி யிற்றொழு வதற்குரியை நீயிவன்
       வணங்கியிட வென்றுமுரியான்
விரவுபெண் மயலுடைப் போகிநீ யிவன்மயலை
       மேவாத பரமயோகி
விடையுடைப் பாகன்முடி யிற்பொறையை நீயிவன்
       விளங்குதளிர் மென்கையில்விடா
தரவவணி யற்பொறுப் பவனாத லால்விரைந்
       தம்பிலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
       னம்புலீ யாடவாவே.
(1)
பையரவின் வெவ்விடப் பகுவாயி னிடைசென்று
       பட்டுனைப் போலநைந்து
பாதியுமை பங்கனை யிகழ்ந்தவவன் வேள்வியிற்
       பல்லொழிந் துழலுமந்த
வெய்யவன் றனையடைந் தென்பயன் மெய்குன்றி
       விரையவிங் கெய்தவரினீ
விரிசிறைய வாரணச் சினையென்ன வேநின்னை
       மிசையவரு பைங்கணரவம்
உய்யலற வோர்நிலச் சுமையரவை வாயலகி
       னோடிக் கவர்ந்தெடுத்தே
யுதறுமொரு தோகைமயி றனையேவ வேதனுக்
       கொருதுணைவ னாயமுருகற்
கையணிவ னுரைசெய்வ னாதலா லுளமகிழ்ந்
       தம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
       னம்புலீ யாடவாவே.
(2)
கரியவண் டிமிர்குவளை யிகலியங் கயல்வென்று
       காதளவு மோடிமீளுங்
கருநெடுங் கண்ணுடைய வொருமாது குழல்வெண்மை
       கருமைசெய் திடுமிவற்குத்
திரியநின் மெய்யினிடை வருகருமை யினைவெண்மை
       செய்வதரி தன்றுகண்டாய்
சிவமென்று முயிரென்றும் வேறுசெய் தகலாத
       திமிரமா மலமகன்றே
இரியவருள் குடியிருக் கின்றவிழி மலர்திறந்
       திணைமலர்ப் பதமுடியின்மே
லிருத்திமன மொழிகடந் துடனின்று குறிகுணழு
       மின்றியரு மறைதனக்கும்
அரியபொரு டனையளிக் கினுமளிக் குவன்விரைந்
       தம்புலீ யாடவாவே
யருள்கசிந் தொழுகுவிழி யுடையசிவ ஞானியுட
       னம்புலீ யாடவாவே.
(3)

1. எண்ணிரண்டு-பதினாறு. எண்ணெண்கலை-அறுபத்து நான்கு கலை. மறு-குற்றம். மயலை-பெண் மோகத்தை. விடையுடைப்பாகன்-சிவபிரான். பொறையை-பொறுக்கப் பெறுதலையுடையை. 2. பை-பாம்பின் படம். பகுவாய்-பிளவுபட்டவாய்.பட்டு-அகப்பட்டு. இகழ்ந்தவன்-தக்கன். வெய்யவன்-கதிரவன். விரிசிறைய-விரிந்த சிறகுகளையுடைய. வாரணச்சினை-கோழி முட்டை. 3. இமிர்-ஒலிக்கின்ற. இகலி-மாறுபட்டு. குழல் வெண்மை-கூந்தலின் நரை. கருமை செய்திடு-கருப்பாகச் செய்த. திமிரமா மலம்-மெய்யறிவை மறைக்கும் பெரிய ஆணவமலம். இரிய-ஓட.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்