முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
போக்கு வரவு குறிகுணங்கள் புணர்தல் பிரித லிரவுபகல்
       புறமுள் ளகன்ற நிரஞ்சனமாய்ப் புகறற் கரிய வவாச்சியமாய்
நீக்கு முருவக் கலையாகி நிறைந்த வநாதி யாதியாய்
       நிகரி லகர முதலனவாய் நின்று பலமந் திரமுநால்
வாக்கு மறையு மாகமமு மற்றுங் கலைகள் பற்பலவு
       மண்ணும் புனலுங் கதழெரியும் வளியும் விசும்பும் பேருலகும்
ஆக்கும் விளையாட் டுடைக்குரிசி லடியேஞ் சிற்றி லழியேலே
       யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.
(4)
செங்கட் கமல மலர்த்தவிசிற் சிறந்து தனிவீற் றிருக்குமொரு
       திசைமா முகற்குத் தொழில்படைத்த றிகிரிப் படைவால் வளைசுமந்த
அங்கைக் கமல விழிக்கரிய வழகன் றனக்குத் தொழிலளித்த
       லழித்த லெமக்குத் தொழிலென்னி லடுபோர்ப் பனைக்கைக் களிற்றுரியும்
பைங்கட் பணியும் வேணிநெடும் பவளக் கொடியிற் றிரைதிரைத்துப்
       பாயுங் கங்கைப் பெயர்யாறும் பணியத் தகுகூன் முதுகமுத
திங்கட் கொழுந்துங் காட்டென்பேஞ் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
       சிகர மயிலைச் சிவஞான தேவா சிற்றில் சிதையேலே.
(5)
கொந்தார் மலரு நறும்புகையுங் கொண்டு நினையாந் தொழத்தக்க
       குலதே வதையாய் வழிபட்டுக் குறித்துப் பணிதுஞ் செங்கரும்பே
நந்தா விளக்கே யமுதமே ஞான வடிவே நாயகமே
       நாடும் பொருளே யென்றென்று நாளு நினையே பாடுதும்யாம்
வந்தார் தமது பிணிதீர்க்கு மருந்தாய்ப் பணியு மரசர்முடி
       மணியா யெமக்கோர் பற்றாய வரிவண் டொழுகு மதுவுண்ணுஞ்
செந்தா மரைச்சே வடிநோவச் சிறியேஞ் சிற்றில் சிதையேலே
       சிகர மயிலைச் சிவஞான தேவா சிற்றில் சிதையேலே.
(6)
வேறு
இற்றைமணல் கோலியிழி சொற்பொருளை வாளா
       வெய்ப்பில்புல வோர்கவியெ னப்புகலு மாபோல்
உற்றொர்பெயர் கூறெமது சிற்றில்சிதை யேலே
       யுய்த்தமொழி யோவல வெமக்கிறைவ னீயே
மற்றுமொரு தேவுள வெனக்கருதி லேமான்
       மக்கள்பிணி யேயலது மற்றருள்செய் யாதே
செற்றறிகி லாவொருவ சிற்றில்சிதை யேலே
       சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே.
(7)

4.நிரஞ்சனம்-மறைப்பற்றது. வாச்சியம்-வாசகத்தால் அறியப்பெறும் பொருள். நால்வாக்கு-நால்வகையாகப் பிரித்துக் கூறப்பெறும் வாக்கு. கதழ்எரி-விரைந்தெரியுந் தீ. 5. திகிரிப்படை-உருளைப்படை. வால்வளை-வெண்சங்கு. அழகன்-திருமால். அடுபோர்-போர் புரிகிற. பனைக்கை-பனைமரத்தைப் போலுந் துதிக்கை.வேணி-சடை. திரை திரைத்து-அலைவீசி. 6. கொந்து-கொத்து. பணிதும்-பணிகின்றோம். நந்தாவிளக்கு-ஒளி குறையாத விளக்கு. ஒழுகு-வரிசை. 7. மணல்கோலி-மணலை வளைத்து. பொருள்நயமில்லாத சொற்களைத் தொகுத்துச் சேர்த்து நுண்ணறிவிலார் செய்யுள் என்று கூறுமாறு போல, மணலைக் கூட்டி வரம்பு வகுத்துப் புனைந்த சிறு வீடு சிற்றில் என்று கூறப்படுகிறது. தே-தெய்வம். செற்று அறிகிலா-வருத்தியறியாத. ஒருவ-ஒப்பற்றவனே.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்