முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
வம்பு லாமலர்ப் பொழிலிடை யுடைந்துகு
       மாங்கனிச் சாறோடும்
வண்டு ழுங்கடி மலர்முறுக் கவிழ்ந்துபெய்
       மதுப்பெயர்ப் பெருவெள்ளம்
அம்பொன் மாமணிப் பூணிள முகிண்முலை
       யரிமதர் மழைக்கட்கே
ழரிச்சி லம்படி மாதரோ டெழின்மத
       னாடுறு முதிர்வேனில்
பம்பு வான்றிரை யாணர்த்தண் புனலெனப்
       பாய்ந்துபா லியாற்றோடி
பரவை தன்கரு நிறந்திரிந் துப்பறப்
       பரந்துறும் விழவானும்
உம்பர் போற்றிசெய் காஞ்சிமா நகரின
       னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர
       னுருட்டுக சிறுதேரே.
(8)
திலக வாணுதற் பவளவாய் மலைமக
       டிரண்முலைத் தடந்தோயுஞ்
செஞ்ச டைப்பெரு மான்விளை யாட்டயர்
       செழுமலர்ப் பொழிற்கூடல்
பலகை மீதுமுன் னுயர்த்துள செந்தமிழ்ப்
       பழமலர்த் தொடைவீழ்ந்து
படிந்தெ ழாதிருந் துறுபொருட் சுவைநறாப்
       பருகுறு பெருங்கல்விப்
புலவர் தூய்மன மெனுங்களி வண்டினம்
       புக்கிருந் தொருங்குண்ணப்
புனைந்த விக்கொடுந் தமிழ்ப்புகர்ச் செம்மொழிப்
       புதுமலர்த் தொடையாரம்
உலகெ லாம்புகழ் திண்புயத் தணிபவ
       னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர
       னுருட்டுக சிறுதேரே.
(9)

8. வம்பு-மணம். உகும்-வழியும். உழும்-கிண்டும். கேழ்அரிச்சிலம்பு-நிறம் பொருந்திய பருக்கைக்கல். பம்புவான் திரை-மிகுந்த நீர்த்திரை. பரவை-கடல். உம்பர்-தேவர். 9. விளையாட்டயர்-அறுபத்து மூன்று திருவிளையாடல்களைச் செய்தருளிய. பலகை-சங்கப்பலகை. சுவைநறா-சுவை பொருந்திய தேன்.புனைந்த-கட்டிய. தொடையாரம்-மாலையாகிய அணிகலம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்