முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
[கலம்பகத்தின் இலக்கணம் முன்பு உரைக்கப்பட்டது. இக்கலம்பகம் சொன்னயம் பொருணயம் முதலிய பலவகையான நயங்களையுந் தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகின்றது.]
காப்பு

நேரிசைவெண்பா
சித்திதருங் கச்சிச் சிவஞான தேசிகன்மேல்
பத்திதரும் பல்வகைய பாட்டுதவும் - அத்தி
அலங்கலா வானை யடுத்தபிடி யீன்ற
விலங்கலா வானை விரைந்து.
 
மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா
நீர்தாங்கு சடாமவுலி நெடுங்கையிலைக் கிரியாகப்
பார்தாங்கு வரையெல்லாம் பனிக்கலைவெண் மதியாகக்
காய்கதிர்மான் றேரிரவி கடலமுதந் தானாகப்
பாய்திரைவார் கடல்யாவும் பண்ணவர்கோன் பகடாக
ஞாலத்த களிறனைத்து நகைமணிப்பாம் பிறையாக
ஆலத்த பணிமுழுது மாக்குபெரும் புகழுடையோய் !

இது ஆறடித்தரவு
 
பழியிலா வறங்கள்பல பயின்றாலு முன்றிருவாய்
மொழியினா லன்றிவான் முத்திநிலை கிடையாதே
விழியினா லலதுலகின் மேவுமுருப் பிறிதுபொறி
வழியினா லெதிர்காணு மனிதர்தா முளர்கொலோ.

இவை மூன்றும் நான்கடித்தாழிசை
 
தத்துவமாந் திரையெழுந்த தனிமாயைப் பெருங்கடலுன்
மெய்த்ததாட் புணையன்றி வேறொன்றாற் கடப்பரிதே
மைத்திரைவார் கடலியன்ற மரக்கலங்கொண் டன்றுபோய்
இத்தரைவாழ் மனிதர்கடந் தேறுவதற் கொன்றுண்டோ.
 
தன்னிலையு மெதிர்காட்டாத் தமமாகு மாணவநோய்
நின்னையல தெஞ்ஞான்று நீங்குவது தானன்றே
துன்னிருள்வாய் முழங்குதிரைச் சுருட்டுகடன் முகட்டெழுந்த
மன்னுகதி ராலன்றி மற்றொன்றான் மாயுமோ.
 

(காப்பு) அத்தி அலங்கல்-ஆத்திமாலை. விலங்கு அலா ஆனை-விலங்கு அல்லாத ஆனைமுகக் கடவுள். 1. பண்ணவர்கோன்பகடு-இந்திரனுடைய வெள்ளை யானை. ஆலத்த-நஞ்சையுடைய. பணி-பாம்பு. பயின்றாலும்-வழக்கமாகச் செய்தாலும். பிறிதுபொறி-வேறு வழி. மெய்த்த-மெய்ம்மைத் தன்மை பொருந்திய. புணை-மரக்கலம். தமம்-கீழ்ப்பட்டது. முகடு-உச்சி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்