முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
நாவலர் புகழ்சிவ ஞான தேசிக
எவ்வ மகன்ற சைவ நாயக
நின்னடிக் கமல நெஞ்சுற விருத்தி
நறுமலர் தூவி நாடொறும் பரவுதூஉம்
செல்வச் செருக்கிற் செவிடுபட் டிருக்கும்
காகிற் றீம்பால் கமர்கவிழ்த் தாங்கு
பாப்பல பன்முறை பாடிநின்னைப்
பாடா மாந்தர் பக்கல்
கூடா வடியரிற் கூட்டுக வெனவே.

இது ஒன்பதடி நேரிசையாசிரியச்சுரிதகம்
(1)
நேரிசைவெண்பா
வேவ மலரும் விழிகரந்த நின்னைமதன்
தேவ சிவஞான தேசிகா - மேவிலனென்
உள்ள மறிந்த வொருநின் றிருமேனிக்
கள்ள மறிந்தனனென் கண்டு.
(2)
கட்டளைக்கலித்துறை
கண்டே னறிவெனு மொண்சுட ரேற்றிக் கருத்தகன்மெய்த்
தண்டேயு மன்புநெய் பெய்துபொய் வாதந் தடுத்தொளிரக்
கொண்டே மலவிரு ளெல்லாந் துரந்தெங் குடிமுழுதுந்
தொண்டே யெனுமெய்ச் சிவஞான தேவன் றுணையடியே.
(3)
பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
அடிமலர் சிவப்ப நடந்துள முனிந்த
       வணங்கினைக் கூட்டுதல் வேண்டா
வடியனேன் றமிழ்க்குக் கலந்துட னிருந்த
       வரிவையைப் பிரிவுசெய் திடுக
மிடிமலி வறிய செங்கல்பொன் னாக்கி
       வியப்புற வுதவுதல் வேண்டா
வெந்தெரி பசும்பொன் செங்கலாக் குகநீ
       வேறுனை வேண்டுவ திலையே
பொடிமறை தழல்போ லிருந்துல கினர்கட்
       புலப்படா னுயர்சிவ ஞானி
புவியிலென் றிருப்ப வனையன்யா னென்று
       பொங்கொளி யிரவிபோற் றோன்றிக்
கடிநக ரெவற்றுஞ் சிறந்தபொற் புரிசைக்
       காஞ்சியிற் போந்தகற் பகமே
கதிர்மணி வரன்றி யருவிவந் திழியுங்
       கயிலைநேர் மயிலைகா வலனே.
(4)

1.எவ்வம்-துன்பம். கமர்-நிலத்தின் வெடிப்பு. 2. வேவ மலரும் விழி-நெற்றிக் கண். கரந்த-மறைத்த. 3. பொய்வாதம்-பொருளற்ற சொற்போர். துரந்து-போக்கி. 4. வெந்தெரி பசும்பொன் செங்கலாக்குக-ஒளியுள்ள பசிய பொன்னைச் செங்கல்போல் நோக்கும் தன்மை எனக்குண்டாகுமாறு உளத்தைப் பண்படுத்துக. பொடிமறை தழல்-நீறுபூத்த நெருப்பு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்