முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கலிநிலைத்துறை
காலம் போயிற் றஞ்சன மன்ன கடாமீதில்
ஆலம் போல்வெங் காலனு மந்தோ வணுகுற்றான்
சீலங் கேண்மி னொய்யென வேநஞ் சிவஞானி
கோலங் காணுங் கொள்கை கருத்திற் குறியீரே.
(12)
கலிவிருத்தம்
குறியுமிலை வடிவுமிலை குணமுமிலை யுரையாடவோர்
பொறியுமிலை மனமுமிலை புலனுமிலை யரிதாகநீ
செறியும்வகை யருள்செய்பொருள் சிவசமய குலதீபமாய்
மறியுமளி மலர்முரலு மயிலைவரு சிவஞானியே.
(13)
நேரிசைவெண்பா
ஞானிபெய ரேதேனு நன்மைதரு மென்னவுஞ்செம்
மேனிபுகல் வேதம் விதித்தபெய - ரான
சிவஞானி நாமஞ் சிவஞானி யென்னான்
அவஞானி யென்ப வவன்.
(14)
கட்டளைக்கலித்துறை
அவனோ விவனென் றெனையாளு மண்ண லடியவர்தம்
பவநோ யகற்றுஞ் சிவஞான தேசிகன் பாரில்வருஞ்
சிவனோ விவனென் றுலகமெ லாந்தொழுந் தெய்வமன்றி
எவனோ தமிய னிதயா லயத்தி லிருப்பவனே.
(15)
கலிவிருத்தம்
இருந்து மேனியோ டிம்மை மறுமையில்
பொருந்து போகம் புரிசிவ ஞானிநீ
விரும்பு வார்கட் கெனக்கருண் மெய்விழைந்
தருந்து மாசை யிலாமையி லாசையே.
(16)
மடக்கு, அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஆசை தனதாண் மூட்டினா னடித்திட் டமுத மூட்டினான்
பாச விருளை யகற்றினான் பதிசே ரறிவை யகற்றினான்
தேசு மலியு மாகத்தன் சிவஞா னிப்பேர் மாகத்தன்
நேச மருவி மறியாரே நிரயத் துயர மறியாரே.
(17)

12. காலம் போயிற்று-வாணாள் முடிந்தது. அஞ்சனம் அன்ன கடா-எருமைக் கடா. ஆலம்-நஞ்சு. ஒய்யென-விரைவாக. கோலம்-திருவடிவம். 13. செறியும் வகை-பொருந்துமாறு. மறியும் அளி-சுற்றித் திரியும் வண்டுகள். மலர் முரலும்-மலரில் ஒலிக்கும். 14. சிவஞானி-சிவபிரானது மெய்மைத் தன்மையை உணர்ந்தவன். அவஞானி-எதற்கும் பயன்படாத வீணான அறிவையுடையவன். 15. பாரில் வரும்-உலகில் மனித வடிவு கொண்டு வந்த. எவனோ-வேறு யாவனோ? 16.பொருந்து போகம்-அமைந்துள்ள பயன்கள். மெய்விழைந்து-உண்மைப் பொருளை விரும்பி. 17. அகற்றினான்-நீங்கச் செய்தான். அகற்றினான்-விரி வடையச் செய்தான். தேசு-ஒளி. ஆகத்தன்-உடலையுடையவன். மாகத்தன்-சிறந்த தலைவன். நிரயத்துயரம்-நரகத்துன்பம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்