முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
பாண். நேரிசைவெண்பா
பார்த்திடுவ னீலகண்ட பாணனா ராகநினைத்
தீர்த்தன் சிவஞான தேசிகன்சீர் - ஏத்திவரில்
பாணா நினைச்சாதி பாராட்டு வேன்பிறர்சீர்
நாணா துரைத்துறலா னான்.
(70)
கட்டளைக்கலித்துறை
நானே சசிவன் னனிற்பெரி யேனவன் ஞானிதனைத்
தானே யடைந்தில னான்றிருக் காஞ்சியிற் றண்மலர்ப்பூந்
தேனே யனைய சிவஞான தேவனைச் சேர்ந்திமைப்பில்
ஊனே யுயிரே யெனுமிவை வேறுபட் டுய்ந்தனனே.
(71)
நேரிசை வெண்பா
உன்னைச் சிறையிட் டுளானெஞ் சிவஞானி
தன்னைப் பணிவினவித் தான்செய்வன் - என்னைப்
படைப்பேன் கிடைப்பேனென் றெண்ணாதே பாழி
அடைப்பேன் கமலால யா.
(72)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஆலய மெனக்கொண் டெம்மனத் தமர்ந்த
       வருட்சிவ ஞானதே சிகவெம்
பாலைய மலர்க்கண் ணிரண்டுடை யாய்க்குப்
       பார்வைமூன் றுளனெனப் படுவோன்
மேலவ னென்னி லவற்குநா லிருகண்
       விண்ணவ னுயர்ந்தவ னவற்குச்
சாலவு மதிக னாவனா யிரங்கட்
       டவளமார் கவளவா ரணனே.
(73)

70. தீர்த்தன்-மேன்மையை உடையவன். ஏத்திவரில்-போற்றிவந்தால். 71. சசிவன்னன்-விருத்தாசல புராணத்திற் கூறப்படும் ஒருவன். இவன் பல தீமைகளைச் செய்து வெண்ணிற நோயை அடைந்தபடியால் சசிவன்னன் என்று பெயர் பெற்றான். இவனை இவன்தந்தை மானந்திபராயணர் என்னும் பெரியவரிடங்கொண்டு போய்த் தீவினையைப் போக்கி மெய்யறிவுபெறச் செய்தான். 72. சிறையிட்டுளான்-படைக்க முடியாதபடி தடைசெய்துள்ளான். கமலாலயா-நான்முகனே! 73. பார்வை மூன்றுளன்-சிவபிரான். நாலிருகண்விண்ணவன்-நான்முகன். தவளம்-வெண்மை. வாரணன்-தேவேந்திரன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்