முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
வாழ்த்து
அருள்பொழி விழிகள் வாழி யறம்பகர் பவளம் வாழி
இருள்புரை தமியே னுள்ளத் தெழுந்துபே ரொளியாய் நின்ற
குருபரன் காஞ்சி வாஞ்சை கொள்சிவ ஞான தேவன்
திருவடி வாழி யன்னான் றிருப்புகழ் வாழி வாழி.
 
எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
முனிப்புலி தொழுசிதம் பரங்கண் ணுற்றவர்
       முழைப்புலி முழங்குமவ் வருணை யங்கிரி
நினைப்பவ ரமலவா ரூர்ப்பி றப்பவர்
       நிகழ்த்துறு காசியிற் சென்றி றப்பவர்
தனிப்பெரு முத்தியை யடைவர் தாங்களே
       தலைப்படு குவருயர் பதமுன் கச்சியை
உனைப்பெயர் பகர்பவர் கேட்கின் றாரொடு
       முரைப்பரும் புகழ்ச்சிவ ஞான தேவனே.
(91)
கைக்கிளை, மருட்பா
தேவென் றறிந்தோஞ் சிவஞான தேசிகனை
ஓவென் றொழுகுமருட் கண்களால் - மாவென்
றிமைக்கும் விழியா லிவளை
இமைக்கு ளணங்கல ளென்றறிந் தோமே.
(92)
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
அறிவதை யறிந்தார் மூவ ரறுமுகக் குரவன் றன்பால்
முறைவரு வருண முற்று முக்கணான் குருவென் றன்பு
செறிகிலன் மலய வெற்புச் செஞ்சடை முனிவன் யாக்கை
குறியவன் குறுகி லானெங் கோன்சிவ ஞானி தானே.
(93)

(வாழ்த்து) பவளம்-பவளம் போன்ற வாய். இருள்புரை-இருளை நிகர்த்த. வாஞ்சை-விருப்பம்.91. முனிப்புலி-வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவர். முழைப்புலி-குகையில் இருக்கும் புலி. கண்ணுற்றவர்-தொழுதவர்.அமலவாரூர்-தூய்மை மிக்க திருவாரூர். தலைப்படுகுவர்-அடைவர். 92. அணங்கு அலள்-தெய்வப்பெண் அல்லள். 93. செறிகிலன்-பொருந்தவில்லை. மலய வெற்பு-பொதிய மலை. யாக்கை-உடல். குறியவன்-குறுகப்பெற்றவன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்