முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
திங்களுங் கதிரு மிலங்கிய மானுந்
      திகழ்பெரும் பூதமோ ரைந்துங்
கங்குலும் பகலுங் கடந்தநின் வடிவங்
      கண்டுகண் களிக்குநா ளுளதோ
பொங்குகுங் குலியக் கலயவா ரழலிற்
      புகையெனச் சரோருக வல்லி
தங்குவண் டெழுபூம் பொய்கைசூழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(87)
பொறியெனப் புலன்க ளெனக்கர ணங்கள்
      பூதங்க ளெனவிலா தடங்க
அறிவெனத் தமியேற் கொருமொழி யுதவி
      யருவினைக் குறும்பற வெறியாய்
செறிமுலைக் கரியுஞ் சிற்றிடை யரியுஞ்
      சேரமா துமைதினங் கட்டுந்
தறியெனக் கவின்பெற் றிலங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(88)
பொன்னிடத் தடைந்த மணியென வடைந்து
      புண்ணியர்க் கருளுநின் பதங்கள்
என்னிடத் திரும்பி னடைந்தசெம் மணிபோ
      லெய்திய தம்மவோ வியப்பே
மன்னிடக் கடலு ளடங்கும்வெற் பன்றி
      மலைதரு மருட்பெருங் கடலைத்
தன்னிடத் தடக்கு மலையெனுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(89)
நீங்கிய நேயத் தவர்க்கறி வரிய
      நெடியவ னெஞ்சகன் றிடாத
தேங்கிய சோதி மன்றுளா டுவவென்
      சிந்தையு ணடப்பநின் பதங்கள்
ஓங்கிய மூங்கிற் றலைமிசை மலர்வீழ்த்
      துழுமளி புரியிறான் மருவித்
தாங்கிய வால வட்டநேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(90)

87. இயமானு மென்புழினகரந் தொக்கது. அல்லி-அகவிதழ்கள்; இவை அழலுக்குவமை. 88. குறும்பு-வலிமை. “அரவுக் குறும்பெறிந்த சிறுகட்டீர்வை” என்பதனாலுமறிக. 89. மன்னிட-நிலைபெற்ற; மலை தருமருட்கடலென்றது உமையை; மலை கடலில் அடங்குவது இயற்கை. ஆனால் கடலாகிய உமை மலையாகிய சிவத்தினிடம் அடங்கியது என்பது முரணணி. 90. நெடியவன்-திருமால்; அளி-வண்டினீட்டம்; இறால்-தேனடை; மன்று-திருச்சிற்றம்பலம். இறால் ஆலவட்டத்துக்கும், மூங்கில் அதன் காம்புக்கும் உவமை. நீங்கிய நேயத்தவர்-அன்பற்றவர்கள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்