முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
சத்திக் கரத்த னகச்சேயங் கத்தினைத் தந்தனனற்
சத்திக் கரத்த னகச்சிலை யாளிதன் றாளிணைநே
சத்திக் கரத்த னகத்தியைந் தேத்தரன் றந்தகதிர்ச்
சத்திக் கரத்த னகசெந்தி லாய்நின் சரண்சரனே.
(12)
சரிதங்கை யாரக் கலன்றந் தனந்தரித் தார்நரகே
சரிதங்கை யாரக் கரிடத்தி னார்தந்த தண்செந்தினே
சரிதங்கை யாரக் கணத்தின்னல் கைத்தல் சரதந்தஞ்சீர்ச்
சரிதங்கை யாரக் கசிந்திசைக் கின்ற தகையினர்க்கே.
(13)
இனனந்தி யங்கி நிகர்த்தசெங் கேழன்மை யீரிரண்டா
யினனந்தி யங்கிரி யைச்சிலை யாக்கிதன் சேயெழிற்செய்
யினனந்தி யங்கி யிருங்கஞ்சஞ் சேர்செந்தி லெந்தைதளை
யினனந்தி யங்கிசை யக்கதி யீந்தன னென்றனக்கே.
(14)
தனக்கடங் காரெயில் செற்றகங் காளன் றனயனங்கந்
தனக்கடங் காதிழி தந்திக் கிளையன் றளிரெழிற்சந்
தனக்கடங் காநிறை செந்திலி னற்சேய் சயிலநங்கை
தனக்கடங் காணினச் சாரிலை யண்ண றரணியிலே.
(15)

12. சத்திக்கர-வலிமையுடைய முதலை, அகச்சேய்-வயிற்றில் இருந்த பிள்ளை. சத்திக்கு அரத்தன்-உமாதேவிக்குச் செந்நிறமாக விளங்குபவன். நகச்சிலையாளி-மகாமேருமலையை வில்லாக ஆண்டவர்: நேசத்து இக்கர் அத்தன்-அன்பினைக் கருப்பு வில்லிலே வைத்த காமனுக்குத் தந்தை. அகத்து இயைந்து ஏத்து-மனம் பொருந்தப் போற்றுகிற. கதிர்ச்சத்தி-ஒளியையுடைய வேற்படை. 13. சரி-வளையல். ஆரக்கலன்-முத்துமாலையாகிய அணிகலன். நரகேசரி தங்கையார்-மனிதமடங்கலாகத் தூணில் தோன்றிய திருமாலின் தங்கையார். அக்கர்-சங்குமணியை அணிந்த பரமசிவன். இதம்கையார்-இன்பத்தை வெறாது செய்வார். இன்னல் கைத்தல் சரதம்-துன்பத்தை வெறுத் தொழித்தல் உண்மை. கைஆர-ஒழுக்கம் பொருந்தும்படி. அன்பினையுடையவர்கட்கு முருகக்கடவுள் இன்பினைச் செய்தல் உண்மை என்று கூட்டுக. 14. இன்அந்தி-இனிதாகிய செவ்வானம். அங்கி-தீ. நிகர்த்த-ஒத்த. செங்கேழன்-செந்நிறத்தையுடையவன். ஆய்இல்நந்தி-மாதாவை யில்லாத நந்தி. அம்கிரி-அழகிய மகாமேருமலை கஞ்சம் சேர்-தாமரையை அடைகின்ற. தளையின்நந்தி-பாசத்தினால் வருந்தி: 15. எயில் செற்ற-மும்மதில்களையும் அழித்த. கங்காளன்-முழு வெலும்பையுடையவன். கடம்-மதம். தந்திக்கு-ஆனை முகக் கடவுளுக்கு. சந்தனக்கடம்-சந்தன மரக்காடு. கா-பூஞ்சோலை. சயில நங்கை-மலையிலிருக்கும் பெண். தனக்கடம் காணின்-கொங்கைகளாகிய குடங்களைக் கண்டால். தரணியில் நச்சார் இலை-உலகில் விரும்பாதவர்கள் இலர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்