முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
வணங்கக் கரமு மொழியப் பழமலை மன்னுருவாய்
இணங்கக் கரமு மிருப்பவைத் தேபுண ரேந்திழையார்
பிணங்கக் கரமு ஞமலியும் போலவர் பின்றொடர்வீர்
அணங்கக் கரமு தலைபோ லுமைப்பற்று மந்தகனே.
(35)
அந்தரங் கங்கை தவரறி யாம லமுதருள்சம்
பந்தரங் கங்கை வலிபோன்மின் னாக்கினர் பாடியுனைச்
செந்தரங் கங்கை ரவமொண் கமலந் திரைத்துவருஞ்
சுந்தரங் கங்கை விரும்புமுத் தாறுடைத் தொன்மலையே.
(36)
மலங்கலை யங்கலை கற்றேன் றனக்கருள் வாழ்வளிபோன்
கலங்கலை யங்கலை நல்லோர் பரவுங் கழலடியான்
விலங்கலை யங்கலை வேலோன் பிதாமுது வெற்பிடத்திற்
பொலங்கலை யங்கலை யான்மூடு மீனைப் புதைத்தவளே,
(37)
புதைத்துக் கரக்கும் பொருளாளர் வெஞ்சொற் பொருமறலி
கதைத்துக் கரக்குங் குமமுலை பாகன்மெய் கண்டடியார்
பதைத்துக் கரக்குஞ் சிறிதா வுருகும் பழமலையான்
வதைத்துக் கரக்குஞ் சரமீர்ந் தவன்றரும் வாழ்விலரே.
(38)

35. கரம்-கை. மன்உருவாய்-நிலைபெற்ற திருவுருவாகி. இணங்கு அக்கரமும்-பொருந்தி நிற்கும் திருவைந்தெழுத்தும். பிணங்க-ஊட. கரமும் ஞமலியும் போல்-கழுதையையும் நாயையும் போல. அணங்க-வருந்த. கரமுதலை-ஆண்முதலை. அந்தகன்-நமன். 36. தரங்கம்-அலை. கைரவம்-அல்லி. கமலம்-தாமரை. சுந்தரம்-அழகைப்பார்த்து. தொன்மலை-பழமலை. கைவலிபோல்-கைவலி காட்டுவாரைப் போல. அங்கம்-எலும்பு. அமுது-ஞானப்பால். கைதவர்-வஞ்சகர். அந்தரங்கம் அருள்-மறைமுகமாக் கொடுத்தருளும். 37. ஐயம் கலங்கல் கலை நல்லோர்-ஐயம் மாறுபாட்டுணர்ச்சி ஆகியவைகளை ஒழித்த மெய்யறிவாளர்கள். விலங்கலை அலைவேலோன்-கிரௌஞ்ச மலையைப் பிளந்த வேற்படையை உடைய முருகன். மீனை-மீன்போன்ற கண்களை. மலங்கலை-மயங்காதே. பொலம் கலையம்-பொற்குடம். கலையால் மூடு-ஆடையால் மறைப்பாயாக. 38. கரக்கும்-ஏற்பவர்கட்குக் கொடாமல் மறைக்கும். பொருளாளர்-செல்வர். வெஞ்சொல்-கடுஞ்சொல். பொரும்-மோதுகின்ற. மறலி கதை துக்கர்-நமனுடைய கதைப்படையால் துன்பத்தையடையவர். அரக்கும் சிறிதா உக்கு உருகும்-அரக்கும் சிறிதாகுமாறு நெகிழ்ந்துருகுதற் கேதுவாகிய. ஈர்ந்தவன்-உரித்தவன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்